ஆதிபராசக்தியுடன் ஜோதியாக கலந்த பங்காரு அடிகளார்.. சந்தன பேழையில் தியான நிலையில் உடல் நல்லடக்கம்
சென்னை: ஆதிபராசக்தியின் பாதங்களில் ஜோதியாக கலந்து விட்ட மேல்மருவத்தூர் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் உடல் இன்று மாலை சந்தன பேழையில் தியான நிலையில் வைத்து சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
அம்மா என்ற ஒற்றை வார்த்தையில் பல லட்சம் பக்தர்களை கட்டிப்போட்டவர் பங்காரு அடிகளார். மேல்மருவத்தூரில் தொடங்கிய ஆதிபராசக்தி சித்தர் பீடம் பட்டி தொட்டி எங்கும் ஓம் சக்தி என்ற குரலை ஒலிக்கச் செய்தது. மக்களின் மூலமந்திரமே மருவூர் அரசிதான். புற்றாகி வந்தவள்.. பாலாகி வடிந்தவள்.. பக்தர்களுக்கு காட்சி அளித்தவள்.. துயர் துடைத்தவள்.. நினைத்த காரியத்தை நிறைவேற்றியவள் ஆதிபராசக்தி. அந்த அம்மனின் ரூபமாக பங்காரு அடிகளாரை தரிசனம் செய்தனர்.

கடவுள் நேரில் வருவாரா என்று பலரும் கேட்கலாம். மனித வடிவில் கடவுள் காட்சி அளிப்பார் என்பதற்கு சாட்சியாக பலரது நம்பிக்கையாக இருந்தவர் பங்காரு அடிகளார். அவரது பாதத்தை வைத்து பலரும் வணங்கி வருகின்றனர். அம்மாவை தரிசனம் செய்தாலே.. அருள்வாக்கு கேட்டாலே துன்பங்கள் நீங்கும் துயரங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இருமுடி ஏந்தி செவ்வாடை அணிந்து விரதம் இருந்து அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பல கோடி. கஞ்சிக்கலயம் சுமந்து வந்து அம்மனை வழிபடுவார்கள். அம்மாவை நினைத்தாலே போதும் எத்தனை பெரிய துன்பங்கள் இருந்தாலும் பறந்தோடி விடும் என்பது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களின் நம்பிக்கை.
தங்களின் ஒரே நம்பிக்கையாக உயிராக இருந்த அம்மா பங்காரு அடிகளாரின் மறைவு பலரது தலையில் இடியென இறங்கியுள்ளது. அம்மாவின் முகத்தை ஒரே ஒருமுறை இறுதியாக பார்த்து விடலாம் என்று நினைத்து அலைகடலென மேல்மருவத்தூருக்கு திரண்டு விட்டனர் பக்தர்கள்.
பங்காரு அடிகளார் உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. எங்கு திரும்பினாலும் செவ்வாடை பக்தர்கள்.. அம்மா அம்மா என்று கேட்கும் அழுகுரல்.. இனி நான் என்ன செய்யப்போகிறேன் என்று கூறி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ஆதிபராசக்தியின் பாதங்களில் ஜோதியாக கலந்து விட்டார் பங்காரு அடிகளார். அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 21 குண்டுகள் முழங்க மூன்று முறை வானத்தை நோக்கி காவல்துறையினர் சுட்டனர். காவல்துறையினர் மரியாதை செலுத்திய போது ஆளுநர் ஆர்.என்.ரவி சல்யூட் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் பொன்முடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து பங்காரு அடிகளாரின் மனைவி, குழந்தைகள் பேரன் பேத்திகள் இறுதி சடங்கில் பங்கேற்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க பிரியா விடைக்க அளிக்க பங்காரு அடிகளார் உடல் கோவிலின் கருவறை - புற்று மண்டபத்திற்கு இடையே சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications