டோல்கேட்டில் இனி நிற்க வேண்டாம்! டிசம்பருக்குள் அமலுக்கு வரும் புதிய வசதி! வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தடுப்புகள் வரும் டிசம்பருக்குள் அகற்றப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இந்த சுங்க கட்டணம் ஆரம்பத்தில் ரொக்கமாக பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஸ்ட் டேக் முறையில் வாகன ஓட்டிகளின் பாஸ்டேக் அக்கவுண்ட்களில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படுகின்றன. இதற்காக சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் சில வினாடிகள் காத்திருந்து பாஸ்டேக்கில் கட்டணம் பிடித்தம் செய்த பிறகே அங்குள்ள தடுப்புகள் ஓபன் ஆகி வாகனங்கள் செல்ல முடியும்.

அதிநவீன ஏஎன்பிஆர் கேமராக்கள்
இதனால் ஏற்படும் கால விரயத்தை போக்கும் நடவடிக்கையாக சுங்கச்சாவடிகளில் உள்ள தடுப்புகளை (barrier Free) நீக்கிவிட்டு தானியங்கி முறையில் கட்டணம் பிடித்தம் செய்யும் தொழில் நுட்பத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. 'புதிய முறையில், செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வு திறனுடன் வாகன நம்பர் பிளேட் அடையாளத்தை தானியங்கி முறையில் காணும் (ANPR) தொழில்நுட்பமும், RFID அடிப்படையிலான மின்னணு டோல் வசூல் முறையான FASTag-மும் பயன்படுத்தி கட்டணம் பிடித்துக்கொள்ளப்படும்.
இந்த புதிய வசதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு சுங்கச்சாவடிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் கொண்டு வரப்படும் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற லாஜிஸ்டிக்ஸ் சக்தி உச்சி மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற நிதின் கட்காரி இந்த தகவலை கூறினார். புதிய தொழில்நுட்பத்தின் கீழ், அதிநவீன ஏஎன்பிஆர் கேமராக்கள் மற்றும் பாஸ்டேக் ரேடார்களை பயன்படுத்தி வாகனங்களுக்கான சுங்க கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
விதிகளை மீறினால் அபராதம்
சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், விதிகளை மீறுபவர்களுக்கு நோட்டீஸ் விடுக்கப்படும். இதன்படி கட்டணம் செலுத்தப்படாவிட்டால், பாஸ்ட் டேக் நிறுத்தி வைக்கப்படும். மத்திய அரசின் வாஹன் செயலி மூலமாக அபராதமும் விதிக்கப்படும். இந்த புதிய டோல் கலெக்ஷன் முறை தொடக்கத்தில் நான்கு வழி அல்லது அதற்கும் அகலமான நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
தற்போது 1.46 லட்சம் கிலோ மீட்டர் தொலைவு கொண்ட நெடுஞ்சாலை அமைப்பில் 46 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் 4 வழிப்பாதையாகவோ அல்லது அதற்கும் மேற்பட்ட அகலத்துடனோ உள்ளது. இதில் சுமார் 2,500 கிலோ மீட்டர் சாலைகள் அதிவேக வழித்தடங்களாக உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கிலோமீட்டர் தொலைவிற்குத் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறையைச் செயல்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி விளக்கம்
இந்த புதிய தொழில் நுட்பம் குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "தடுப்புகள் இல்லாத டோல் வசதியில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதில் தானியங்கி வாகன எண் பலகை அடையாளம் காணும் அமைப்பு, நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பொருத்தப்படும் அதி நவீன கேமராக்கள், செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் வசூல் மற்றும் மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) ஆகியவை அடங்கும்" என்றார். டெல்லி - மீரட் எக்ஸ்பிரஸ் வே சாலையில் சோதனை அடிப்படையில் இந்த டோல் சிஸ்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications