20 ஆண்டுகள் ஜெயிலில் இருந்துட்டோம்! ஆயுள் தண்டனையை ரத்து செய்க! பவாரியா கொள்ளையர்கள் அப்பீல்
சென்னை: கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனத்தை கொன்று 62 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் பவாரியா கொள்ளையர்களுக்கு சென்னை கூடுதல் நீதிமன்ற அமர்வு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த சுதர்சனத்தின் வீட்டு கதவை யாரோ தட்டினர். உடனே மாடியில் இருந்த சுதர்சனம் கீழே இறங்கிய போது முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்களை பார்த்து சப்தமிட்டார்.

இதையடுத்து பவாரியா கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அவரது வீட்டில் இருந்த 62 பவுன் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அப்போது ஐஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் தேடப்பட்டனர்.
அந்த வகையில் ராஜஸ்தான், ஹரியானாவை சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். கைதான 9 பேரில் 3 பேர் ஜாமீனில் வெளியாகி தலைமறைவாகிவிட்டனர். 2 பேர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டனர்.
தற்போது சிறையில் உள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக், ஜாமீன் பெற்ற ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து பவாரியா கும்பலைச் சேர்ந்த ஜெகதீஷ், அசோக், ராகேஷ் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் நீதிமன்ற அமர்வு கடந்த நவம்பர் 23 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
இவர்களுக்கான தண்டனை விவரங்களை நவம்பர் 24 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் 4ஆவது குற்றவாளியான ஜெயில்தார் சிங்கை விடுதலைச் செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதால் தங்களுக்கான ஆயுள் தண்டனையை ரத்து செய்யுமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, பெரியபாளையம் போலீஸார் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications