காவல்துறை அனுமதியுடன் சென்னையில் திரையிடப்பட்ட பிபிசி ஆவணப்படம்! வள்ளுவர் கோட்டத்தில் பார்த்த மக்கள்
குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு இருப்பதாக கூறி பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரையிடப்பட்டது.
சென்னை: குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு இருப்பதாக கூறி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கும் நிலையில், நேற்று காவல்துறை அனுமதியுடன் சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டியக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரையிடப்பட்ட ஆவணப்படத்தை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர்.
குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதுடன் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
உலகையே உலுக்கிய இந்த கோர மத வன்முறை தொடர்பாக பிரிட்டிஷ் விசாரணை கமிஷன் நடத்திய விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பிபிசி "இந்தியா: தி மோடி குவெஸ்டீன்" என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து இருக்கிறது.

பிபிசி ஆவணப்படம்
அதில், குஜராத் கலவரத்தின் பின்னணியில் பிரதமர் மோடியின் பங்கு இருப்பதாக கூறப்பட்டு இருப்பது பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்ததால் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்படவில்லை.

பல்கலைக்கழக மாணவர்கள்
அதே நேரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த ஆவணப்படத்தை பார்த்து கருத்திட்டு வந்தனர். இந்தியாவில் பல்வேறு இணையதளங்களிலும், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஆகிய தளங்களில் இந்த ஆவணப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டங்களை மாணவர் அமைப்புகள் நடத்தின.

சென்னையில் போராட்டம்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்றவற்றில் மாணவர் அமைப்பினர் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டெல்லி ஜேஎன்யுவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன் DYFI அமைப்பு நடத்தியது.

சமூக செயற்பாட்டாளர் கூட்டியக்கம்
இதில் பங்கேற்ற சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் கைது செய்யப்பட்டது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டியக்கம் என்ற அமைப்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆவணப்படத்தை திரையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது.

காவல்துறை அனுமதி
இதற்கு நேற்று சென்னை காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. அதில், "மனுதாரர் மாலை 4 மணியளவில் சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் - காவல் உதவி ஆணையாளர் குறிப்பிடும் இடத்தில் குழுமி 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

பல்வேறு நிபந்தனைகள்
போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாமல், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரையறைகளின்படி அமைதியான - முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆர்ப்பாட்டம் மாலை 5 மணிக்குள் முடிக்கப்படவேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை
எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நீடித்தல் கூடாது. ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் கலந்து கொண்டவர்கள் அமைதியாக கலைந்து செல்லவேண்டும். காவல்துறையின் வரையறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களது அன்றாட அலுவல்களைச் செய்வதில் எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

விமர்சிக்கக் கூடாது
பிற மதத்தினர், இனத்தினர், தனிப்பட்ட நபர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகளை தாக்கிப் பேசுவதோ, மனம் புண்படும்படியான ஆட்சேபகரமான சட்டப்புறம்பான பேச்சுக்கள் பேசவோ, முழக்கங்கள் எழுப்பவோ, பதாகைகள் மூலமாக வெளிப்படுத்தவோ கூடாது.ஆர்ப்பாட்டம் தொடர்பாக அமைக்கப்படும் பேனர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

கூம்பு ஒலிபெருக்கிக்கு தடை
அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூம்புவடிவ ஒலிபெருக்கி உபயோகப்படுத்தக்கூடாது. மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் உருவ பொம்மைகளை கொண்டு வரவோ, எரிக்கவோ கூடாது." போன்ற கட்டுப்பாடுகளை போலீசார் தெரிவித்தது.

திரண்டு வந்த மக்கள்
இதனை தொடர்ந்து நேற்று மாலை பிபிசியின் ஆவணப்படம் திட்டமிட்டபடி காட்சிபடுத்தப்பட்டது. திரையிடல் நிகழ்ச்சிக்கு பல கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், பேராசிரியர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications