திமுக நாகரீக அரசியல் செய்வதால்.. ஸ்டாலின் புகழ் நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது! டிஆர்பி ராஜா
சென்னை: திமுக ஐடி பிரிவின் செயலரும் மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா, ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
இப்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தில் களத்தில் கட்சியைப் பலப்படுத்தும் அளவுக்கு இணையதளங்களிலும் பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. திமுகவில் அதற்கான பொறுப்பு மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
திமுகவின் ஐடி பிரிவின் செயலாளராக உள்ள டிஆர்பி ராஜா கட்சியின் ஐடி விங்கை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையே ஒன் இந்தியா தமிழ் ஊடகத்திற்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில் பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

வழிநடத்தும் முதல்வர்
ஒன் இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் இருக்கும் நாகரீக அரசியலைச் சீர்குலைக்க இப்போது சிலர் முயல்கின்றனர். ஆனால் ஜனநாயகத்தின் உண்மை காவலாளியாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தின் நாகரீக அரசியலைக் காத்து வருகிறார். கீழ்த்தரமான எதிரி இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்கிறார் முதல்வர்! ஒரு தலைவனின் பண்பே கட்சியாகச் சரியாக வழிநடத்துவது தான். எனவே, முதல்வர் சரியாகவே செயல்பட்டு வருகிறார்.

முதல்வர் அட்வைஸ்
அரசியில் என்பது ஒரு தொடர் இயக்கம். அதிலும் திமுகவில் தொடர்ந்து பலரும், பல வயதைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டே இருக்கிறார்கள். எனவே, புதிதாக இணையும் இளைஞர்கள், திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே 'எங்கள் கருத்துகளை வெட்டியும் ஓட்டியும் கருத்துகள் பரப்பப்படுவதால் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்' முதல்வர் மீண்டும் அறிவுரை கொடுத்து வருகிறார். இது இப்போது மட்டும் நடப்பது இல்லை.. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் விஷயம் தான்.

ஐடி விங்
இந்த இனத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு நாளும் சிந்திக்கும் இயக்கம் தான் திமுக.. எனவே கடந்த கால அனுபவத்தில் இருந்து முதல்வர் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். அடுத்தடுத்து தலைமுறைகளுக்குத் தேவையான அறிவுரையை முதல்வர் வழங்கி வருகிறார். தமிழகத்திற்குப் பல நன்மைகளை திமுகவும் அதன் தலைவர்களும் தான் கொண்டு வந்து உள்ளனர். திராவிட இயக்கத்தின் தலைவர்கள் போட்டுத் தந்த பாதையில் தான் பயணித்து வருகிறோம். கொஞ்ச நாட்களில் இது தொடர்பாகப் பல முக்கிய தகவல்கள் ஐடி விங்கில் இருந்து வெளியிட உள்ளோம்.

விளக்கம்
முதல்வருக்கு எந்த விஷயத்தை எப்படிக் கையாள வேண்டும் என்று தெரியும். எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் தொடர்ந்து பதில் அளித்தே வருகிறோம். இது இப்போது மட்டும் இல்லை, வரலாற்றில் தொடர்ந்து இப்படி தான் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் நாங்கள் சலிப்பு அடைந்துவிட மாட்டோம். நாங்கள் விளக்கம் கொடுக்கும் எதுவும் திட்டமிட்டுப் பரப்பும் எதிர்க்கட்சியினருக்கு இல்லை. அது சொந்த கட்சியினருக்கே கொடுக்கும் விளக்கம் தான். உண்மையைக் காட்டிலும் சமூகத்தில் போலி செய்திகள் வேகமாகப் பரவும். இப்படி தீயாக பரப்பப்படும் போய் விஷயங்களைக் கேட்டு நம்ம ஆட்கள் ஏமாறக் கூடாது என்பதற்காகவே விளக்கம் கொடுத்து வருகிறோம். அதைத் தான் இந்த திமுக ஐடி விங் 2.0 செய்து வருகிறது. பேக்ட் செக் செய்யப் பல புதிய முயற்சிகளை ஐடி விங் சார்பில் எடுத்து வருகிறது.

செய்த தவறுகள்
கடந்த காலங்களில் திமுக மக்களுக்கு அதிக நலத்திட்டங்களைச் செய்தது. அதில் தான் அதிக கவனம் செலுத்தினோம். ஆனால், அந்த திட்டங்களைச் செய்தது திமுக தான் என்று மக்களிடம் எடுத்துக் கூற தவறிவிட்டோம். செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்காதது நாங்கள் செய்த தவறாக அமைந்துவிட்டது. இதைத்தான் ஐடி விங் உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. பொய் தகவல்களுக்கு விளக்கம் தரவில்லை என்றால் உங்கள் மீது தவறு இருக்கிறதா என்று வேட்பாளர்கள். விளக்கம் தருவதே பின்னடைவு என்று எடுத்துக் கொள்ள முடியாது.

எதிர்க்கட்சியினர்
எதிர் தரப்பினரிடம் சொல்ல எதுவுமே இல்லை. செய்த திட்டங்கள் என எதுவும் இல்லை. எனவே, பொய் செய்தி தான் அவர்களின் ஒரே ஆயுதமாக உள்ளது. திமுக ஐடி விங் 2.o இப்போது தொடங்கப்பட்டு உள்ளது. அதில் ஐடி விங் தனியாகவும் சமூக வலைத்தள பிரிவும் தனியாகச் செயல்படும். ஐடி விங்கிலும் பெண்களுக்குத் தனியாக ஒரு பிரிவை விரைவில் உருவாக்க உள்ளோம். ஐடி விங்கில் கடந்த ஆறு மாதங்களில் 5 லட்சம் பேரைக் கட்சியில் இணைத்து உள்ளோம். விரைவில் 10 லட்சம் பேரைச் சேர்க்க உள்ளோம்" என்றார்.

போலி செய்தி
தொடர்ந்து போலி செய்திகளைப் பரப்புவதே திமுக தான் என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அவர், "அவர்கள் செய்வதை மற்றவர்கள் செய்வதாகச் சொல்கிறார்கள். எதிரணி பயன்படுத்தும் ஆயுதத்தின் மூலமே அவர்களுக்குப் பதில் அளிக்க முடியும். அப்போது தான் வெல்ல முடியும். அதற்காக நாங்கள் பொய் செய்திகளைப் பரப்புகிறோம் என நான் கூறவில்லை. அது உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். நேரத்திற்கு ஏற்ற போல அரசியல் செய்வோம். அதற்கேற்ப நடவடிக்கைகள் இருக்கும்" என்று அவர் பதில் அளித்தார்.

எதிர்வினை போதாது
மேலும், நாகரீக அரசியல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "திமுக சிந்தனையாளர்கள் அனைவருக்கும் தனித்தனி சிந்தனை இருக்கும். அறிவாற்றல் இல்லாத தலைவர்கள் கொண்ட இயங்களில் தான் பிரச்சினை இருக்காது. திமுக அறிவான தலைவர்கள் கொண்ட இயக்கம். எனவே, விவாதம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் அந்தளவுக்கு ஜனநாயகத்தன்மை கொண்ட குடும்பம் திமுக. பெரிய குடும்பத்தில் பிரச்சினை வருவதே இயல்பு.. இந்த நாகரீக அரசியல் காரணமாகவே இந்திய அளவில் மிகப் பெரிய தலைவராக ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார். ஒரு சில நேரங்களில் ஏன் இவ்வளவு நாகரீகமாக இருக்கிறார் என்று எங்களுக்கே தோன்றும்.

போதவில்லை
ஆனால், அனுபவம் காரணமாக முதல்வர் இந்தளவுக்கு அமைதியாக இருக்கிறீர். சரியாகக் கையாள்கிறார். அதனால் தான் அவர் தேசிய அளவில் உயர்ந்து இருக்கிறார். எதிரணியினர் கீழ்த்தரமான அரசியலைச் செய்து வருகின்றனர். அதற்கு இன்னும் கூட திமுகவினர் ஆவேச பதிலடியைக் கொடுக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. அதிலும் அமைச்சர் பிடிஆர் மீதான செருப்பு வீச்சு சம்பவத்தில் எதிர்ப்பு போதவில்லை என்பதே எனது நிலைப்பாடு.

நான் தொண்டர் பக்கம் தான்
நான் அங்கு இருந்து இருந்தால், எதிர்ப்பு வேறு மாதிரி இருந்து இருக்கும். இவ்வளவு கீழ்த்தரமான வேலையை அவர்களைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் இன்னும் ஆவேச பதிலடி கொடுத்து இருக்க வேண்டும் தான். இந்த விஷயத்தில் நான் தொண்டர்கள் பக்கம் தான் இருக்கிறேன். இதை நான் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன். அது தான் திமுக. திமுகவில் தலைவர் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. " என்றார்.












Click it and Unblock the Notifications