சில்லறை இல்லைன்னு சொல்லாதீங்க பா.. ஜிபி-ல போட்டுட்டு போங்க! திருப்பத்தூரில் டிஜிட்டல் பிச்சைக்காரர்
திருப்பத்தூர்: சில்லறை இல்லைன்னு சொல்லாதீங்க.. இந்த ஜிபேயில் ஸ்கேன் செய்து போட்டுவிட்டு போங்க என்று கூறி திருப்பத்தூரில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். வெளியில் வரும் பலரும் பர்ஸ் கொண்டுவருவதில்லை என்றும், இதனால் பிச்சை கேட்கும் போதெல்லாம் சில்லறை இல்லை சில்லறை இல்லை சொல்லி வருவதால் நாங்களும் கியூஆர் கோடு வைத்து பிச்சை எடுத்து வருவதாக அந்த முதியவர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகமாகி உள்ளன. கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் என்ற அளவுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகமாகிவிட்டது. கிராமங்களில் கூட சிறிய பெட்டிக் கடைகளில் கூட யுபிஐ கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் வசதி வந்துவிட்டது.

சில்லறை இல்லைன்னு சொல்லாதீங்க
இதனால் இப்போது எல்லாம் செல்போன் மட்டும் கையில் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். முன்பெல்லாம் வேலைக்கு கிளம்பும் போதோ, இல்லை வெளியில் கிளம்பும்போதோ பாக்கெட்டில் மறக்காமல் பர்ஸை எடுத்து வைத்துக்கொண்டு செல்வார்கள். ஆனால் இப்போதைய நவீன டிஜிட்டல் காலத்தில் பர்ஸ் பயன்படுத்துபவர்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. அந்த அளவுக்கு எல்லார் கையிலும் செல்போனும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளும் அதிகமாகிவிட்டன.
என்னதான் டிஜிட்டல் முறைக்கு நாம் எல்லாரும் மாறிவிட்டாலும், ஏழ்மையானவர்கள் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. பிச்சைக்காரர்கள் இல்லாத நிலை வந்துவிடவில்லை. பலரும் டிஜிட்டலை நோக்கி செல்லும் நிலையில், பிச்சைக்காரர்களுக்கு பர்ஸ் கொண்டுவரவில்லை என்று, சில்லறை இல்லை.. சில்லறை இல்லை என்றும் பலரும் சொல்லி விடுகிறார்களாம். இதற்காகவே பிச்சைக்காரர்களும் தற்போது யுபிஐ கியூஆர் கோடு அடங்கிய அட்டையை வைத்து பிச்சை கேட்கிறார்களாம்.
திருப்பத்தூர் பிச்சைக்காரர்
சில்லறை இல்லைன்னு சொல்லாதீங்க.. இந்த ஜிபேயில் ஸ்கேன் செய்து போட்டுவிட்டு போங்க என்று கூறி திருப்பத்தூரில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார். அரசு பேருந்துகளில் கூட இப்போது டிஜிட்டல் முறை அறிமுகம் ஆகிவிட்டதால், நாங்கள் பிச்சை கேட்டால், சில்லறை இல்லை என்று சொல்லிவிடுவதாகவும் இதனாலேயே நாங்களும் யூபிஐ ஸ்கேன் அட்டையை வைத்து பிச்சை எடுத்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் அருகே வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தான் 'டிஜிட்டல்' முறையில் பிச்சை எடுத்து வருகிறார். 60 வயதான அவர், க்யூஆர் கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு சில்லறை இல்லை என்று சொல்பவர்களிடம் இந்த அட்டையை காண்பித்து இதில் பணம் செலுத்துங்கள் என்று சொல்லி பிச்சை எடுத்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ
இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் அந்த முதியவரிடம் இதுபற்றி கேட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக பேசிய அந்த முதியவர், "தற்போது செல்போன், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம்தான் பெரும்பாலான பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இப்போது பர்சில் பணம் வைத்துக்கொள்வது மிகவும் அரிதாக உள்ளது. எனவே தான் இப்படி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம். என்னிடம் 3 வங்கி ஏடிஎம் கார்டுகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
பிச்சைக்காரர் ஒருவர் கியூஆர் கோடு அட்டையை வைத்துக்கொண்டு 'டிஜிட்டல்' முறையில் பிச்சை எடுத்து வருவதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. தற்போது சில கோவில்களில் அன்னதானம், உள்ளிட்ட பணிகளுக்கு நன்கொடை பெறுவதற்கு இதேபோன்று ஜிபேயில் பணம் பெறுகிறார்கள். திருமண வீடுகளில் கூட மொய்ப்பணத்தினை சிலர் ஜிபே மூலம் பெறுவதையும் பார்க்க முடிகின்றது.












Click it and Unblock the Notifications