தூள் கிளப்பும் தமிழக அரசு! பெல்ட் ஏரியாக்களில் குடியிருக்கும் 80 ஆயிரம் பேருக்கு இலவச பட்டா
சென்னை: பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில் வருமான வரம்பு உள்ளிட்ட விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி 80 ஆயிரம் இலவச பட்டாக்களை 6 மாத காலத்திற்குள் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வருவாய் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த வரம்பு தற்போது, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
நில ஒதுக்கீடு
இதன் அடிப்படையில், நில ஒதுக்கீட்டு வரம்புகளும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாயாக உள்ள குடும்பங்களுக்கு, 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.
2 சென்ட்
அதில், 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் எதுவும் இருக்காது; மீதமுள்ள ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.
ஆண்டு வருமானம்
ஆண்டு வருமானம், 5 லட்சம் ரூபாய்க்கு மேல், 12 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் குடும்பங்கள், 2 சென்ட்டுக்கு நில மதிப்பில், 50 சதவீத தொகையும், ஒரு சென்ட்டுக்கு நில மதிப்பில், 100 சதவீத தொகையையும் செலுத்த வேண்டும்.
12 லட்சம்
ஆண்டு வருமானம், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பங்கள், 3 சென்ட்டுக்கும் நில மதிப்பில், 100 சதவீத தொகையை செலுத்த வேண்டும். நகர்ப்புறம், ஊரகம் இரண்டுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
29187 குடும்பங்கள்
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 532 கிராமங்களை சேர்ந்த 29,187 குடும்பங்கள், ஏனைய மாவட்டங்களில் 57,084 குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது. இதற்கான வழிகாட்டி விதிமுறைகள் கடந்த மாதமே வெளியாகின.
திருத்த கோரிக்கை
அதில் சொல்லப்பட்டுள்ள ஆண்டு வருமான வரம்பில் சில திருத்தம் செய்ய கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஆக்கிரமிப்பு
சென்னையை சுற்றியுள்ள அரசு நிலம், நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டும் 1962ஆம் ஆண்டு பெல்ட் ஏரியா என குறிப்பிடப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நகரமயமாதல் காரணமாக சென்னையைச் சுற்றி 32 கி.மீ. சுற்றளவில் பெல்ட் ஏரியாவாக குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு பட்டா வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அரசாணை
இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட போது சென்னை சுற்றிய பகுதிகள் சைதாப்பேட்டை மாவட்டமாக இருந்தன. இதில் பொன்னேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், சைதாப்பேட்டை என 4 தாலுக்காக்கள் பெல்ட் ஏரியாக்களில் இருந்தன. ஆனால் தற்போது இவை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பல்வேறு தாலுக்காக்கள் உள்ளன.
4 மாவட்டங்கள்
பெல்ட் ஏரியாவாக அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் 532 வருவாய் கிராமங்கள் உள்ளன. சென்னை தற்போது அதிக அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. மெட்ரோ பாலிட்டன் சிட்டியாக உள்ளதால் வேலை, கல்வி நிமித்தமாக பலர் சென்னைக்கு குடிப்பெயர்கிறார்கள். அவர்கள் சென்னையில் சொந்த வீடுகளை வாங்குகிறார்கள்.
பெல்ட் ஏரியா என்றால் என்ன
அவ்வாறு 4 மாவட்டங்களின் பெல்ட் ஏரியாவில் வசிப்போருக்கு மின்சார வசதி, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்கள் வழங்கப்பட்டன. ஆனால் பட்டா வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்தான் இதுகுறித்து சட்டசபையில் குரல் எழுந்தது. இதைத் தொடர்ந்து பெல்ட் ஏரியாவில் பட்டா இல்லாமல் அரசு நிலங்களில் வசிப்போருக்கு புதிய சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications