உயிரிழந்தது வங்கப் புலி விஜயன்.. வண்டலூரில் அதிர்ச்சி! புலிகள் எண்ணிக்கையை அதிகரித்ததே விஜயன்தானாம்!
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆண் வங்கப் புலி 'விஜயன்' இன்று உயிரிழந்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததில் விஜயனின் பங்கு அதிகம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, மான்கள், மலைப்பாம்புகள் மற்றும் பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும், உயிரினங்களும் உள்ளன. வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து உயிரினங்களை கண்டுகளித்து வருகின்றனர்.

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் வங்கப் புலி கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. விஜயன் என்ற 21 வயது கொண்ட ஆண் வங்கப் புலி கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் உணவு உட்கொள்வதை குறைத்து கொண்டதன் காரணமாக படிப்படியாக அதனுடைய உடல்நிலை சரியில்லாமல் போனது.
விஜயன் புலியின் உடல்நிலை தொடர்ந்து தொய்வடைந்து வந்த நிலையில், அதற்கு ரத்த பரிசோதனை செய்ததில், அதன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும், வங்கப் புலி விஜயனுக்கு வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக காணப்பட்டு வந்தது. பூங்கா வன உயிரின மருத்துவ குழுவினரால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், விஜயன் இன்று உயிரிழந்துள்ளது. உயிரிழந்த வங்கப் புலி விஜயனுக்கு 21 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் சிகிச்சை பலனின்றி வங்கப்புலி விஜயன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் பூங்காவில் புலிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்ததில் விஜயனின் பங்கு அதிகம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications