சூட்டிங் நேரத்தில் நயன்தாரா, விக்கி காதல்.. வெட்கமா இல்லையான்னு ராதிகாவிடம் கேட்ட தனுஷ்!
சென்னை: நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை சேர்க்க நடிகர் தனுஷ் அனுமதி மறுத்ததாக நயன்தாரா வைத்த குற்றச்சாட்டு பூதாகரமாகி உள்ளது. இதற்கிடையே தான் நாளை வெளியாகும் இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் குறித்து நடிகை தனுஷ் தன்னிடம் சொன்னதாக நடிகை ராதிகா கூறியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாக வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடந்த 2022ம் ஆண்டு இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரபல ஓடிடி தளத்தில் 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற பெயரில் ஆவணப்படமாக நாளை வெளியாக உள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு ‛நானும் ரவுடிதான்' என்ற படத்தில் தான் காதல் மலர்ந்தது. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும், விஜய் சேதுபதியும் நடித்து இருந்தனர். விஜய் சேதுபதியின் தாயாக நடிகை ராதிகா நடித்திருந்தார். விக்னேஷ் சிவன் படத்தை இயக்க நடிகர் தனுஷ் தயாரித்து இருந்தார்.
இந்நிலையில் தான் நாளை வெளியாகும் ஆவணப்படத்தில் டிரெய்லரில், 'நானும் ரவுடி தான்' படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட 3 வினாடி காட்சி இடம்பிடித்து இருந்தது. அந்த படத்தின் மூலம் தான் காதல் மலர்ந்ததால் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் அந்த படத்தின் காட்சி, பாடலை பயன்படுத்த முடிவு செய்திருந்தனர். இதற்கு படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. அதோடு ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
இதனால் நடிகை நயன்தாரா நேற்று நடிகர் தனுஷ் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை அடுக்கி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது தற்போது ‛டாக் ஆப் தி டவுன்' ஆக உள்ளது. இதனால், சர்ச்சைக்குள்ளான 3 வினாடி காட்சிகளை நயன்தாரா நீக்குவாரா? இல்லையா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்து வந்தது. இந்த நிலையில், ஆவணப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி இன்று ஒளிபரப்பப்பட்டது.
அதில், நடிகர் தனுஷின் எதிர்ப்பை மீறி, பட ஷூட்டிங்கின் போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஒன்றாக இருக்கும் 3 வினாடி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், இரு தரப்பினரிடையேயான மோதல் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது அதுமட்டுமில்லாமல், நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் குறித்து தனுஷ் தன்னிடம் விமர்சித்துப் பேசியதாக, நடிகை ராதிகா பேசும் காட்சிகள் நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நடிகை ராதிகா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதுபற்றி தெரிவித்து இருந்தார். அதில் ராதிகா, ‛நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியிருப்பார். அப்போது அவர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா குறித்த காதலை தன்னிடம் நடிகர் தனுஷ் தான் தெரிவித்ததாக கூறியிருப்பார். இதுதொடர்பாக ராதிகா, ‛‛நான் சென்னைக்கு வந்த பிறகு தனுஷ் எனக்கு போன் செய்தார். அக்கா சூட்டிங் எப்படிக்கா நடந்தது என்று கேட்டார். நன்றாக நடந்தது என்று கூறினேன். அப்புறம் ஒரு விஷயம் தெரியுமா அக்கா? என்று கேட்டார். என்ன விஷயம் என்று கேட்டேன்.
அதற்கு, இந்த மாதிரி நயனும், விக்கியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க என்றார். அப்போது நான் சும்மா சொல்லாத.. நான் தானே சூட்டிங்கில் இருந்தேன். கதை விடாதே என்று கூறினேன். அதற்கு உங்களுக்கு வெட்கம் இருக்கா? இவ்வளவு வருஷம் நடிக்கிறீங்களே.. பெரிய நடிகர்னு தான் பேரு. உங்களுக்கு வெட்கமே இல்லை அக்கா. உங்கள் கண் முன்னாடியே இவ்வளவு நடந்து இருக்கு என்று கூறினார். அதன் பிறகு நானே அவர்களிடம் (நயன்தாரா - விக்னேஷ் சிவன்) கூறினேன். என்னையையே வச்சி செஞ்சிட்டிங்க. அவன் (தனுஷ்) என்னை துப்பாத குறைதான் என்று கூறினேன். இந்த விஷயத்தில் வச்சி செஞ்சாங்க''என்று கூறியிருந்தார். நடிகை ராதிகாவின் இந்த கருத்துகளை பிரதிபலிக்கும் வகையிலான காட்சிகள் தற்போது ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications