Bhagavad Gita: பகவத் கீதை மதப் புத்தகம் அல்ல.. உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கருத்து
மதுரை: பகவத் கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைத்து வைக்க முடியாது என்றும், பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி பகவத் கீதை என்றும் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். பகவத் கீதை ஒரு மத புத்தகம் இல்லை. தார்மீக அறிவியல். அது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தூய தத்துவங்களை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
மதுரையில் கோவை ஆர்ஷ வித்யா அறக்கட்டளை வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற விண்ணப்பம் மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் கருத்து கூறிய நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இவ்வாறு கூறினார்.

கோவை ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளை
கோவை ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளை அறங்காவலர் சுவாமி சர்வானந்த சரஸ்வதி விமல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆர்ஷ வித்யா பரம்பரை அறக்கட்டளையை எப்சிஆர்ஏ கீழ் பதிவு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், "மனுதாரரின் விண்ணப்பத்தை கடும் ஆய்வுக்கு உட்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை. ஏனெனில், மனுதாரர் அறக்கட்டளை ஒரு மத அமைப்பு. இதனால், மனுதாரர் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
பகவத் கீதை மதப் புத்தகம் அல்ல
அப்போது நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கூறுகையில், "இந்த அறக்கட்டளை பகவத் கீதை சொல்லிக் கொடுப்பதால் மத அமைப்பு என முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால், பகவத் கீதை மதப் புத்தகம் அல்ல. மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து 3 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும்" என்று உள்துறை அமைச்சகத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டார்..
மேலும், யோகாவை பொறுத்தவரை அதை மதத்தின் கண்ணாடி மூலம் பார்ப்பது கொடூரமானது. பகவத் கீதைக்கு என்ன பொருந்துகிறதோ அது வேதாந்தத்திற்கும் பொருந்தும். பகவத் கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைத்து வைக்க முடியாது. பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி பகவத் கீதை. தார்மீக அறிவியல். அது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தூய தத்துவங்களை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications