அரசு ஊழியர்களுடன் கைகோர்க்கும் தனியார் தொழிலாளர்கள்! இன்று ஸ்ட்ரைக்! 30 கோடி பேர் பங்கேற்பு!
சென்னை: மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடு முழுவதும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் மொத்தம் 30 கோடி பேர் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருந்த தொழிலாளர் சட்ட தொகுப்புக்கு அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது தனியார் துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்களுடன் தனியார் தொழிலாளர்களும் கை கோர்க்கின்றனர்.

என்ன பாதிப்பு?
சிஐடியு உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை, வேலை நிறுத்தம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த போராட்டத்தின் மிக முக்கியமான கோரிக்கை மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான்.
வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மின்சாரம், போக்குவரத்து, காப்பீடு, சுகாதாரம் மற்றும் வங்கி உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
ஸ்ட்ரைக் ஏன்?
போராட்டம் குறித்து ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் கூறுகையில், "மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, தேசவிரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் இன்று நடக்கிறது.
மின் விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், எரிவாயு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 30 கோடி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த துறை சார்ந்த சேவைகள் பாதிக்கப்படும்.
யார் யார் பங்கேற்கிறார்கள்?
வங்கி ஊழியர்கள் ஏற்கனவே ஜனவரி 27 இல் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நிலையில், குறிப்பிட்ட சில வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மட்டும் தற்போதைய போராட்டத்தில் பங்கேற்கின்றன. சுரங்கம் மற்றும் எரிவாயு குழாய் பணிகளில் வேலை நிறுத்த போராட்டத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இன்சூரன்ஸ் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதியை கண்டித்து, அந்த துறை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து துறையில் தனியார் மற்றும் அரசு பணியாளர்களின் பெருவாரியான ஆதரவு இருக்கிறது" என கூறியிருக்கிறார்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பெருவாரியான அளவில் பங்கேற்கின்றனர். போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக போக்குவரத்து ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று அழைக்கப்பட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications