“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர் வன்னியரசு, வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா? என கேட்டு பாரதிராஜாவின் படைப்புகளை புழந்திருக்கிறார்.
வன்னியரசு பேசியதாவது, "இமயம் பாரதிராஜா அவர்களுடைய இந்த மரணம் தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, திரை துறைக்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க புதுமையை படைத்தவர்களுக்கு, மாற்றத்தை விரும்புகிறவர்களுக்கான மிக முக்கியமான ஒரு இழப்பாக பார்க்க முடிகின்றது.

தலைவர் திருமாவளவன் டெல்லியில் இருப்பதால், அவருக்கு பதிலாக இங்கே விடுதலை சிறுத்தை எல்லோரும் சேர்ந்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். மரியாதைக்குரிய அண்ணன் பாரதிராஜா, முழுமையாக இந்த சினிமா உலகை திசை திருப்பியவர். அரங்குக்குள் இருந்த அல்லது ஷூட்டிங் ஸ்பாட் என ஒரு சிறிய ஸ்டூடியோவுக்குள் இருந்ததை, வெளி உலகத்திற்கு கொண்டு வந்தார்.
அவர் மிக முக்கியமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தை, தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றியவர். தமிழ்நாடு என்கின்ற அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியவர். தமிழ் தேசிய அரசியலை உண்மையாக முன்னெடுத்தவர். தமிழீழ விடுதலையில் அக்கறை கொண்டவர். அது மட்டுமல்ல தன்னுடைய படைப்புகளில் சாதிய கட்டமைப்புகளை உடைத்து வந்தவர்.
அவருக்கு இரண்டாவது படம் புதிய வார்ப்புகள். மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்குவதில் அவர் வந்து தன்னை முழுமைப்படுத்திக் கொண்டவர். அதேபோல வேதம் புதிது திரைப்படம் இன்றைக்கு இந்த படம் எடுத்தால் அந்த படம் வர முடியுமா? சாதி ஆதிக்கத்திற்கு எதிராக தன்னை படைப்பாளியாக மாற்றிக்கொண்டு, வருகின்ற புதிய புதிய தலைமுறை, இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, ஒரு வாத்தியாராக இருந்தவர் அண்ணன் இயக்குநர் இமயம் பாரதிராஜா." என்று கூறியிருக்கிறார். பாரதிராஜாவின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications