பிக்பாஸ் வீட்டில் உள்ள வனிதா எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு.. தெலுங்கானா போலீஸ் அதிரடி
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா ஆள் கடத்தல் வழக்கில் எந்த நேரத்திலும் தெலுங்கானா போலீசாரால் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007ல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் வனிதா ஆனந்தராஜ் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த 2012ம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து செய்தனர். இவர்களது மகள் ஜெனிதா, தனது தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறார்.
இந்த சூழலில் மகள் ஜெனிதாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சூழலில் நடிகை வனிதா தற்போது தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் 'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதற்காக அவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் உள்ளார்.
அவரை கைது செய்ய உதவுமாறு நசரத்பேட்டை போலீசாரிடம் தெலங்கானா போலீசார் உதவியை கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வனிதா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பிக்பாஸ் வீடு இருக்கும் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.