கண்ணை உறுத்தும் திமுக ஓட்டு.. கணக்கு பண்ணும் பாஜக.. கருகுதா தாமரை? எகிறியடிக்கும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: பாஜகவால் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை இழந்த நிலையில், இன்று கோவையிலேயே, பாஜகவுக்கு ஷாக் தரப்போகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சிறுபான்மையினர் ஓட்டுக்களை அதிமுக பக்கம் கொண்டு வரும் முனைப்புடன், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டது. சூட்டோடு சூட்டாக, முஸ்லிம் அமைப்புகளுக்கு அதிமுக அழைப்பும் விடுத்தது..

அதிருப்திகள்: இதற்கு பிறகுதான், இஸ்லாமிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அதிமுகவுக்கு ஆதரவையும் தந்தார்கள். ஆனால், அசாதுத்தீன் ஓவைசி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி என ஒருசிலரே எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவை தந்துள்ளார்களே தவிர, பெரிய கட்சி யாருமே இதுவரை அதிமுகவுடன் கூட்டணியை அறிவிக்கவில்லை.
அந்தவகையில், அதிமுக தரப்பு சற்று அப்செட்டாகவே இருப்பதாக தெரிகிறது. மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டிவிட்டால், திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளை, அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என்றெல்லாம் கணக்கு போட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், திமுகவில் இருந்து யாருமே கூட்டணிக்கு வரவில்லை.
திமுக பேரம்: அதிமுக கூட்டணிக்கு போய் விடுவோம் என்று காரணம் காட்டி, தங்களுடைய கூட்டணி பேரத்தையே திமுகவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உயர்த்தி கொண்டனவே தவிர, ஒருத்தரும் அதிமுக பக்கம் வரவில்லை.
இவர்கள்தான் இப்படியென்றால், சொந்த கூட்டணியில் தோழமை கட்சிகளான, தமாகா, புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் கட்சி, ஜான்பாண்டியன், பாரிவேந்தர், இப்படி இவர்களும் அதிமுக கூட்டணி பக்கம் வரவேயில்லை.
இதனால், அதிமுகவுக்குள்ளிருக்கும், பாஜக "ஆதரவு" தலைவர்களே கடுப்பாகிவிட்ட நிலையில், அடுத்த அதிரடியை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, முதல் வேலையாக, சிறுபான்மையின தலைவர்களின் ஆதரவையும் பெற முயன்றுள்ளார்.
கிறிஸ்தவ அமைப்புகள்: அந்தவகையில், 4 நாட்களுக்கு முன்பு, கிறிஸ்தவ அமைப்புகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.. தமிழ்நாடு ஐக்கிய கிறிஸ்தவ கழகத்தின் சார்பிலும், கிறிஸ்தவர்கள் திரண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதுடன், இன்று கருமத்தம்பட்டியில் நடைபெற உள்ள கிறிஸ்தவர்கள் உரிமை மீட்டெடுப்பு மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.
அவர்களின் அழைப்பை ஏற்ற எடப்பாடி பழனிசாமியும் மாநாட்டிற்கு வரப்போவதாக உறுதி தந்திருந்தார். அதன்படியே, இந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் இன்று எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.. கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக இன்று கோவையில் நடக்க போகிறது..
மாற்று கட்சியினர்: இதே பகுதியில் மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் அதிமுகவில் இணையும் இன்னொரு விழாவும் நடக்க போகிறதாம்.. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.. இவரது முன்னிலையில்தான், 3 ஆயிரம் பேர் அதிமுகவில் இணைய போகிறார்கள்..
பாஜகவிலிருந்து பிரிந்த பிறகு, கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.. இந்த மாநாடு கிறிஸ்தவர்களின் ஆதரவை அதிமுக பெறும் மாநாடாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. அதேபோல, கோவையில் இந்த மாநாடு நடைபெறும் நிலையில், இந்த பின்னணியில் கொங்கு மண்டல மாஜியின் பங்கு பெருமளவு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
நெருக்கம்: எப்படி பார்த்தாலும், 6 வருடங்களுக்கு முன்பு பாஜகவால் இழந்துவிட்ட சிறுபான்மையினர் வாக்குகளை, மறுபடியும் பெற்றாக வேண்டும் என்ற உறுதியுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாராம்.
அதுமட்டுமல்ல, திமுகவின் பலமே அதனுடைய சிறுபான்மையினர் ஓட்டுக்கள்தான்.. எனவே, திமுகவிடம் வெகுவாரியாக குவிந்திருக்கும் அந்த சிறுபான்மையினர் ஓட்டுக்களை உடைக்க முற்பட்டுள்ளாராம் எடப்பாடி.. அதற்கேற்றவாறு, கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகளும் அதிமுகவுடன் இன்றைய தினம் நெருங்கி வருவதாகவே தெரிகிறது... எனினும் இதெல்லாம் ஓட்டுக்களாக அதிமுகவுக்கு திரும்ப கிடைக்குமா? என்பதுதான் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
இதில் இன்னொரு தகவலும் கசிந்துள்ளது.. இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மிக பிரமாண்டமான மாநாடு நடத்த போகிறார்களாம். இந்த மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியை பங்கேற்க அழைக்க போகிறார்களாம்.. அப்போது இஸ்லாமியர்களுக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் இருவர் மீதும், இஸ்லாமியர்கள் எந்த அளவுக்கு பாசத்துடன் இருந்தாகளோ அதே பாசத்தை மறுபடியும் பெறப்போகும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள் இருக்கும் என்கிறார்கள். திடீரென அதிமுக எடுத்துள்ள இந்த வியூகம், திமுகவை அதிர வைத்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications