ரேஷன்தாரர்களுக்கு அறிவிப்பு.. ஆதார் கார்டு இருக்குல்ல? ரேஷன் கார்டில் இது முக்கியம்.. வந்தது அதிரடி
சென்னை: பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்து வருகிறது.. இந்நிலையில், ரேஷன்தாரர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.. சில சிக்கல்களை தவிர்க்கும் வண்ணம் இந்த அறிவுரை வழங்கியிருப்பதாக தெரிகிறது.
தமிழகத்திலுள்ள 36,954 நியாயவிலைக்கடைகள் மூலம் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு போன்ற ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே இதன்மூலம் பலனடைந்தும் வருகின்றனர்.
புதிய அட்டைகள்: மேலும், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, 2.8 லட்சம் குடும்பத்தினருக்கு, புதிய ரேஷன் அட்டைகள் இம்மாதத்தில் வழங்கப்படும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்திரக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில், உயிரிழந்தவர்களின் பெயரை நீக்குவதில் கவனமுடன் செயல்படுமாறு, ரேஷன் கார்டுதாரர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
உறுப்பினர்கள்: இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "தமிழகத்தில், 2.24 கோடி ரேஷன் கார்டுகளில், 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். கார்டில் உறுப்பினராக உள்ள ஒருவர் உயிரிழந்து விட்டால், அடக்கம் செய்யும் போது உயிரிழந்தவரின், ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில், உறவினர்கள் கவனக்குறைவாக, உயிரிழந்த நபருக்கு பதில் தங்களின் ஆதார் கார்டின் நகலையே தந்துவிடுகிறார்கள்.
அதை, ஊழியர்களும் கவனமுடன் சரிபார்ப்பதில்லை... அடக்கம் செய்யப்பட்ட நபர்களின் ஆதார் நகலை மொத்தமாக சேர்த்து அலுவலகம் அனுப்புகிறார்கள்.. அதன்படி, மின் ஆளுமை முகமை வாயிலாக, ஆதார் எண் அடிப்படையில் ரேஷன் கார்டில் இருந்து பெயர் நீக்கப்பட்டுவிடுகிறது..
உணவு வழங்கல் துறை: இதற்கு பிறகு, உயிரிழந்தவருக்கு பதில் தங்களின் ஆதார் எண்ணை தவறுதலாக வழங்கிய உறவினர்கள், உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு வந்து, தங்கள் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக முறையிடுகிறார்கள். இப்படி இந்த 3 வருடங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான், ரேஷன் கார்டுதாரர்கள், உயிரிழந்தவரின் பெயரை நீக்குவதில், அதிக கவனமுடன் செயல்பட வேண்டும்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications