இதுதான் தமிழ்நாடு "மாடல்".. ஒருத்தரை விட கூடாது.. 777 பேரை லிஸ்ட் போட்ட அரசு.. தடதடத்த போன் கால்கள்!
சென்னை: 12ம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேராத மாணவ, மாணவியரை தமிழ்நாடு அரசு தீவிரமாக தேடி வருகிறது. இவர்களுக்கு கல்வி கொடுக்கும் விதமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கல்வித்துறை தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் முன்னேறி உள்ளது. இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்கள், ஏன் பல வளர்ந்த நாடுகளை விட தமிழ்நாடு கல்வித்துறையில் சிறப்பாக இருக்கிறது.
உதாரணமாக தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை 51.4 சதவிகிதமாக உள்ளது. அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளை விட தமிழ்நாட்டில்தான் மாணவர்கள் அதிக அளவில் உயர் கல்வி பயில்கிறார்கள்.

முன்னேற்றம்
இந்தியாவின் GER அதாவது உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை வெறும் 27.1% ஆக உள்ளது. இந்த விஷயத்தில் மட்டுமின்றி பல்வேறு குறியீடுகளில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்து உள்ளது. அடிபப்டை கல்வியில் மட்டுமின்றி, உயர்கல்வி மீதும் தமிழ்நாடு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் பள்ளி இடை நிற்றலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டதே அதற்குத்தான். அதன்பின் பஸ்பாஸ் திட்டம், இலவச சைக்கிள், இலவச லேப்டாப் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது இடைநிற்றலை தவிர்க்கவே.

கல்வி
அது மட்டுமின்றி முக்கியமாக பெண் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் திட்டமும் மாணவியர்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவேத்தான். அதேபோல்தான் தற்போது உயர் கல்வி மீதும் தமிழ்நாடு அரசு தனது பார்வையை திருப்பி உள்ளது. அதன் ஒரு கட்டமாக 12ம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேராத மாணவ, மாணவியரை தமிழ்நாடு அரசு தீவிரமாக தேடி வருகிறது.

உயர்கல்வி
இவர்களுக்கு கல்வி கொடுக்கும் விதமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குடும்ப நிதிநிலை, விரும்பிய பாடப் பிரிவு கிடைக்காதது என பல காரணங்களினால் மாணவ, மாணவியர் பலர் உயர்கல்வியில் சேரமாட்டார்கள். 12ம் வகுப்பு முடித்து அவர்கள் வேலைக்கு செல்லும் முடிவை எடுப்பார்கள். இதில் முக்கியமாக மாணவிகள் அதிகம் இருப்பார்கள்.

மாணவிகள்
இவர்களைத்தான் கண்டுபிடித்து கல்லூரியில் சேர்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் உயர்கல்வி தொடரா மாணவர்கள் இருப்பின் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அதனை களைந்து, அவர்கள் உயர்கல்வி தொடர்ந்திட தேவையான வழிகாட்டுல்கள் வழங்கவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தின் போது பெறப்பட்ட 79,762 மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எத்தனை பேர்
எனவே, இத்தகு மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட விவரங்களில் கூடுதலாக மாணவர்களின் EMIS எண், கல்வி மாவட்டம், மதிப்பெண், தொலைப்பேசி எண் உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளிலிருந்து பெற உள்ளோம், என்று கூறப்பட்டது. அதில் 7800க்கும் அதிகமான மாணவ, மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.

கல்வித்துறை
பிளஸ் 2 முடித்த மீதம் உள்ள 777 மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் இன்னும் சேரவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சேராதது ஏன் என்று கண்டுபிடிக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை இறங்கி உள்ளது. இவர்களை கண்டுபிடித்து, நிதியுதவி, ஆலோசனை உள்ளிட்டவைகளை வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் பெறப்பட்டு அதை உடனடியாக அரசுக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலகர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications