சக்ஸஸ்.. பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்.. இன்னைக்கும் "சர்ப்ரைஸ்".. ஒரேநாளில் இப்படியா
சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், தமிழக பத்திரப்பதிவு துறை, அடுத்த அதிரடியை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த ஸ்வீட் தகவலும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் அனைத்துமே தற்போது ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன.. எனவே, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அனைத்துமே, முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்ய வேண்டும்..

டோக்கன் சிஸ்டம்: இதற்கு பிறகே, பத்திரங்களின் அடிப்படை சரிபார்ப்பு முடிந்த பிறகு விண்ணப்பதாரரின் விருப்பம் மற்றும் சார்பதிவாளரின் பணி அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டு, பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில், தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகங்களில், சராசரியாக நாளொன்றுக்கு, 100 முதல், 200 பத்திர பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.. அதிலும், குறிப்பிட்ட சில நாட்களில், அதிக பத்திரங்கள் பதிவாக வாய்ப்புள்ள சமயத்தில், இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கப்படும்.
சுபமுகூர்த்தம்: அந்தவகையில், நேற்று முன்தினம் தினம் சுபமுகூர்த்த நாளாகும்.. இந்த தினத்தை முன்னிட்டு, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.. இந்த கோரிக்கையை பதிவுத்துறையும் ஏற்றுக்கொண்டது. பின்னர், இதுகுறித்து பதிவுத் துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பில், சுபமுகூர்த்த தினங்கள் என்று கருதப்படும் நாட்களில் பத்திரப் பதிவுகள் அதிக அளவில் நடைபெறும். எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அந்த நாட்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஐப்பசி முதல் நாளான அக்டோபர் 18-ம் தேதியே சுபமுகூர்த்த நாள் என்பதால், கூடுதலாக முன்பதிவு டோக்கன் ஒதுக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.
அதிரடி உத்தரவு: இதை ஏற்று, அக்.18-ம் தேதி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.
அதேபோல, அதிக அளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களில் சாதாரண முன்பதிவில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், தத்கால் முன்பதிவில் 12-க்கு பதிலாக 16 டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால், ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்திருக்கிறது.. இதையடுத்து, இன்றும் கூடுதல் டோக்கன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அடுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
சாதனை: அதில், "அதிகளவு பத்திரப்பதிவுகள் நடக்கும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் அக்.18-ம் தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன் விளைவாக நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.
சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் ஐப்பசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்றும் (அக்.20) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அக். 20-ம் தேதி கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் தர பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டோக்கன்கள்: அதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதில் 300 டோக்கன்களும், அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன் என 16 டோக்கன்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications