UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்!
சென்னை: யுபிஐ (UPI) பயன்பாட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு. ஜூன் 1, 2026 முதல் நாடு முழுவதும் புதிய யுபிஐ விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்டுள்ள இந்த 'உண்மைப் பெயர்' (Real Name) விதி, டிஜிட்டல் மோசடிகளை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம், அமேசான் பே உள்ளிட்ட அனைத்து யுபிஐ செயலிகளையும் தினசரி பயன்படுத்தும் மக்களுக்கு இந்த மாற்றம் நேரடியாகப் பாதிக்கும். இதுவரை, தொடர்புகளில் சேமித்த பெயர்களோ (அண்ணா, தம்பி, ஃப்ரெண்ட்) அல்லது வணிகர்கள் விரும்பிய பெயர்களோ திரையில் தோன்றும். இனிமேல் அப்படி இல்லை.

புதிய விதிப்படி, பணம் அனுப்பும்போது பெறுநரின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ முழு பெயர் (Bank Registered Legal Name) மட்டுமே தெரியும். இது P2P (தனிநபர் நபருக்கு) மற்றும் P2M (வணிகருக்கு) பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். NPCI-யின் OC-101/2020-21 சுற்றறிக்கை மூலம் இந்த உத்தரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏன் இந்த மாற்றம்?
இந்தியா உலகின் மிகப்பெரிய ரியல்-டைம் பேமெண்ட் சந்தையாக வளர்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் 24,162 கோடிக்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக PIB அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய பெரிய அளவிலான பரிவர்த்தனைகளில், சிறிய சதவீத மோசடிகூட பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கும்.
ஆன்லைன் மோசடியாளர்கள் இதுவரை போலி பெயர்களைப் பயன்படுத்தி, பிரபல நிறுவனங்கள் அல்லது உறவினர்களின் பெயர்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வந்தனர். புதிய விதி இந்த வாய்ப்பை முற்றிலும் தடுக்கும். யுபிஐ பின் உள்ளிடும் முன்பு பெறுநரின் உண்மையான பெயர் தெரியும் என்பதால், தவறான நபருக்கு பணம் அனுப்பும் அபாயம் குறையும்.
பயனர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்:
செயலிகள் தொடர்பு பட்டியல் அல்லது பயனர்-எடிட் செய்த பெயர்களை காட்டக்கூடாது.
பெயர் எடிட் ஆப்ஷன் முழுமையாக நீக்கப்படும்.
வங்கியின் கோர் பேங்கிங் சிஸ்டத்தில் உள்ள சட்டப்பூர்வ பெயர் மட்டுமே காட்டப்படும்.
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் யுபிஐ செயலிகளை உடனடியாக Google Play Store அல்லது App Store-ல் இருந்து லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுங்கள்.
அடிக்கடி பணம் அனுப்பும் நபர்கள் மற்றும் சிறு வணிகர்களின் பெயர்களை சரிபாருங்கள்.
பெயரில் வித்தியாசம் இருந்தால், பணம் அனுப்பும் முன் நேரடியாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த மாற்றம் EPFO, முன்னணி வங்கிகள் மற்றும் NPCI இணைந்து எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாகும். டிஜிட்டல் இந்தியா இயக்கத்தை மேலும் பலப்படுத்தும் இந்த விதிமுறை, நுகர்வோரின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த 'உண்மைப் பெயர்' விதி ஒரு வரவேற்கத்தக்க பாதுகாப்பு கவசமாக அமையும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் இந்த முயற்சி, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications