ஆட்டமே தலைகீழா மாறப்போகுது.. உயர்சாதிகளை தோலுரித்த சாதிவாரி கணக்கெடுப்பு! பீகாரில் மலரும் திராவிடம்
சென்னை: இந்தியாவுக்கே முன்னோடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டு இருக்கும் பீகாரில், இதன் மூலமாக மாறப்போகும் அரசியல், சமூக நிலை குறித்து விரிவாக பார்ப்போம்.
வெளியுலகை பொறுத்தவரை பீகார் மாநிலம் என்றாலே சாதி, மத வன்முறைகள், ஆதிக்க சாதியினர்களின் அடக்குமுறைகள், புலம்பெயர் தொழிலாளார்கள், சமூக ஏற்றத்தாழ்வு, பொருளாதார மந்தநிலை போன்றவையே நினைவுக்கு வரும். அதேநேரம் 1917 ஆம் ஆண்டு காந்தி, ராஜேந்திர பிரசாத்தின் சாம்பரான் சத்யாகிரகம், ஜக்ஜீவன் ராமின் சமூக நீதி அரசியலும் இந்த மாநிலத்தில்தான் நடந்தது. இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் பீகார் எப்போதுமே வித்தியாசமானது. குறிப்பாக லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் ஆகியோரது அரசியல் வருகைக்கு பிறகு பீகாரில் மாநில கட்சிகளின் ஆதிக்கமே ஓங்கி இருக்கிறது. இவர்கள் இருவருமே பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை செலுத்தினார்கள்.

பல்வேறு சமூகங்களை உள்ளடக்கி இருந்த பீகாரில் இருந்து பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலம் 2000 வது ஆண்டு நவம்பர் மாதம் பிரிந்தது. 1990 களில் லாலு பிரசாத் ஆட்சியில் பீகாரில் இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக உயர்சாதியினர் போர்க்கொடி தூக்கினர். குறைந்த எண்ணிக்கையில் வசித்து வரும் உயர்சாதியினர் ஆதிக்கம் அதிகம் இருந்த பீகாரில், லாலு பிரசாத் யாதவ் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சமூக நீதி அடிப்படையில் இடமும், அங்கீகாரமும், உரிமையும் கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1990 ஆம் ஆண்டு வட மாநிலங்களில் பெரும் மதக் கலவரங்களுக்கு காரணமான அத்வானியின் ரத யாத்திரையை பீகாருக்குள் நுழைய விடாமல் தடுத்தார் லாலு பிரசாத் யாதவ். மண்டல் அரசியலின் மையப் பகுதியாகவே அப்போது பீகார் இருந்தது. லாலுவின் பதவிக் காலத்தில் நிதிஷ் குமாருடன் ஜனதா தளத்துக்குள் ஏற்பட்ட மோதல் பாஜக அம்மாநிலத்திற்குள் நுழைந்திட வழிவகுத்தது. 2014 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தவரை பீகாரில் சமூக நீதி அரசியலே வேரூன்றி இருந்தது.
அதன் பின்னர், நிதிஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, அக்கட்சி அங்கு மேலும் வளர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அதே நேரம் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறையாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக இருந்தது. இதுவரை பல தசாப்தங்களுக்கு முன் மத்திய அரசால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு நடத்தவில்லை. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களை தனித்தனியாக கணக்கெடுக்கவும் மத்திய அரசு மறுத்தது.
பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகளவில் வசித்து வரும் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது முதன்மை கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து ஆர்ஜேடி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த நிதீஷ் குமார் சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதில் எந்தெந்த சாதியினர் எத்தனை சதவீதம் வசிக்கிறார்கள் என்ற முழுமையான விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1931 ஆம் ஆண்டில் இருந்து காத்திருந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தங்களின் உண்மையான தற்போதைய எண்ணிக்கை கிடைத்து உள்ளது.
அதன்படி ஓபிசி பட்டியலில் வரும் யாதவ் சமூகத்தினர் அங்கு தனிப்பெரும் சாதியாக 14% என்ற அளவில் உள்ளனர். உயர்சாதியினர் மொத்தமாகவே 10.5 சதவீதம் மட்டுமே உள்ளார்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர் 19.7%, பழங்குடியினர் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத பிரிவினர் 15.50% உள்ளனர். உயர்சாதியினரின் பிராமணர்கள் 3.6 சதவீதம், ராஜபுத்திரர்கள் 3.4 சதவீதம், பூமிஹார்ஸ் 2.8 சதவீதம், மற்றும் காயஸ்தர்கள் 0.6 சதவீதம் அடங்குவர்.
இந்த எண்களை ஒப்பிடுகையில் பீகார் மாநிலத்தில் அரசியல் மற்றும் அரசு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் உயர்சாதியினரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். பீகாரில் 1996 ஆம் ஆண்டு பதானி தோலாவில் 21 தலித்துகளையும் , 1997 ஆம் ஆண்டு லக்ஷ்மன்பூர் பாத்தேயில் 61 தலித்துகளையும், 1999 ஆம் ஆண்டு ஷங்கர் பிகாவில் 22 தலித்துகளையும் பூமிஹார் சமூக இயக்கமான ரன்வீர் சேனா கொன்றது. தலித் கிராமங்களை அழித்தது. இந்த கொடூர கொலைகளை செய்தவர்கள் பலர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பீகார் மக்கள் தொகையில் 19.6 சதவீதமாக இருக்கும் தலித்துகள் மீது வெறும் 2.8 சதவீதம் மட்டுமே இருக்கும் பூமிஹார்கள் அடுக்குமுறையை ஏவுவதற்கு காரணம், சாதி அமைப்பால் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வும், எண்ணிக்கையை விட அதிகமான அளவில் பூமிஹார்ஸ் சமூகத்தினருக்கு அரசியல், அரசு துறைகளில் கிடைத்து இருக்கும் அதிகாரமும், மித மிஞ்சி போய் இருக்கும் பொருளாதார பலமும்தான். குறைந்த சதவீதத்தில் வசிக்கும் உயர் சாதியினரின் பொருளாதார ஆதிக்கம் இதை இன்னும் உறுதிபடுத்துகிறது.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்த மற்றொரு முக்கிய விசயம் என்னவென்றால் உயர்சாதியினரான பிராமணர்கள் மற்றும் காயஸ்தர்கள் அரசு பதவிகளில் தங்கள் மக்கள் தொகை சதவீதத்திற்கும் அதிகமான அளவில் இருந்து வருவதுதான். தற்போதைய சூழலில் பெரும்பாலான கட்சிகள் சமூக நீதி அரசியலை பேசும் நிலைக்கு வந்து உள்ளன. பிரதிநிதித்துவ அரசியலை காங்கிரஸ் கட்சியும் முன்னெடுத்து உள்ளது என்பதை, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த அரசு செயலாளர்கள் எண்ணிக்கை குறித்து மக்களவையில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை வைத்து உணர முடியும்.
நூறு ஆண்டுகளுக்கு முன் எப்படி நீதிக்கட்சியும், திராவிடர் இயக்கங்களும் தமிழ்நாட்டில் சமூக நீதி அரசியலை முன்னெடுத்து அனைத்து அரசு துறைகளில் இருக்கும் உயர்சாதியினர் ஆதிக்கத்தை ஒழித்து இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரையும் அதிகாரத்தில் அமர வைத்ததை போன்ற ஒரு மாற்றத்தை இனி பீகார் காணும். பீகாரின் திராவிட இயக்க புள்ளியை இந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் வைத்து இருக்கிறார் முதலமைச்சர் நிதீஷ் குமார். இதன் காரணமாக பீகாரின் அரசியலும், சமூக கட்டமைப்பும் தலைகீழாக மாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
எண்ணிக்கையை விட மித மிஞ்சிய அளவில் சமூக - பொருளாதார அதிகாரத்தை வைத்து இருக்கும் உயர்சாதியினரின் அதிகாரம், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்படும். பீகாரின் அரசியல் தளம் இனி இதே நிலையில் நிச்சயம் இருக்காது. திராவிட மாடல் என்பதைபோல், பீகார் மாடல் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். திராவிட கொள்கைகளுடன் மண்டல் அரசியல் இணைந்து பின் தங்கிய பீகார், பீரங்கிபோல் பீறிட்டுக்கொண்டு உச்சம் தொடும் காலம் வெகு தொலைவில் இல்லை.
-
நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா? ராஜ்யசபா எம்பியாக முடிவு.. பீகார் முதல்வர் பதவியை கைப்பற்றும் பாஜக -
கண்ட்ரோலை எடுக்கும் பாஜக! ஒரு காலத்தில் பீகாரில் மோடியை.. கால் வைக்க விடாத நிதிஷுக்கு நேர்ந்த கதி! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
நீலகிரி அரசு ஊழியரை மயக்கிய இளம் பெண்.. ஒரே நாளில் 20 லட்சம் சம்பாத்தியம்.. ட்விஸ்ட் -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
டெல்லிக்கு பறக்கும் விஜயகாந்த் மச்சான்.. ஒரே கையெழுத்தில் மாறிய தலையெழுத்து! காங்கிரஸுக்கு கல்தா! -
ஓபிஎஸ் வந்து.. 1 வாரம் கூட ஆகலியே.. அதற்குள் அதிரும் அறிவாலய கதவுகள்.. திமுகவில் ஏடாகூட பிரச்சனை! -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி












Click it and Unblock the Notifications