பிறப்பு சான்றிதழில்.. உங்க குழந்தையின் பெயரை பதிந்து விட்டீர்களா? இதோ, தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்வது குறித்து, தமிழக கலெக்டர்கள் முக்கிய வேண்டுகோளை, தங்கள் மாவட்ட மக்களுக்கு விடுத்து வருகிறார்கள்.
ஆதார் கார்டை போலவே, ரேஷன் கார்டை போலவே, பிறப்பு சான்றிதழ்கள் மிகவும் அவசியமான ஒன்றாகும்.. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட அரசு வழங்கும் அடையாள அட்டைகளை பெறுவது வரை, இந்த பிறப்புச்சான்றிதழ் தேவையாக இருக்கிறது.

இந்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து கொடுத்து விடுகிறது. குழந்தையின் பெயரை மட்டும் நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம்.
ஒரே ஆவணம்: இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. அதுவும், 14 நாள்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும், தற்போது, பிறப்பு சான்றிதழ், நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்திற்கும் ஒரே ஆவணமாகியிருக்கிறது..
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம், 2023 மூலம் இந்த சட்டம், திருத்தத்துடன் சமீபத்தில் அமலாக்கப்பட்டது. இந்த சட்டம் மூலம் இனி பிறப்பு சான்றிதழை முக்கியமான ஆவணமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஆன்லைன் வழியாக மத்திய அரசின் தளங்களில் இந்த சான்றிதழ்களை டவுன் லோடு செய்ய முடியும். ஆதார் அட்டையை எப்படி ஆவணமாக பயன்படுத்துகிறமோ அதேபோல் இதையும் பயன்படுத்த முடியும்.
முக்கிய அறிவுறுத்தல்: இந்நிலையில், பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரைபதிவு செய்ய கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூர், கடலூர், ராமநாதபுரம் என தமிழக மாவட்ட கலெக்டர்கள் முக்கிய செய்திக்குறிப்பையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த செய்திக்குறிப்பில் உள்ளதாவது:
பிறப்பு சான்றிதழ் பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற, பிறப்பு- இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது.
பிறப்பு சான்றிதழ்: பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு- இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பெயர் பதிவு செய்திடலாம்.
தாமத கட்டணம்: 12 மாதங்களுக்கு பிறகு 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி, குழந்தையின் பெயரை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது.
இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி, 1.1.2000 -க்கு முன்பு பதிவு செய்த பிறப்புகளுக்கும், 1.1.2000 -க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்துபிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட தாலுகா, பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர்கள்: இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு, இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்" என்று கலெக்டர்கள் தங்கள் மாவட்ட மக்களை கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications