பிறப்பு சான்றிதழ் அவசியம்.. பாஸ்போர்ட்டில் வாழ்க்கை துணைவரின் பெயரை சேர்க்க, நீக்க புதிய நடைமுறை
சென்னை: பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, மறுமணம் செய்தவர்கள், தங்களின் துணைவர் குறித்த தகவலை சேர்ப்பதில் நடைமுறை சிக்கல் இருந்து வந்த நிலையில், இதற்கு ஒரு தீர்வு தற்போது எடுக்கப்பட்டுள்ளது.. பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரை சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. இதனை பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ளது..
பாஸ்போர்ட் பெறுவதற்கான சட்ட விதிகளில் நீண்ட காலமாகவே எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. ஏனென்றால், கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் பெரும்பாலானவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இருக்காது என்பதால், அது சம்பந்தமான எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே இருந்தது..

ஆனால், கடந்த மார்ச் மாதம், பாஸ்போர்ட் சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்திருந்தது.. இது சம்பந்தமாக வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.
பிறப்பு சான்றிதழ் கட்டாயம்
மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும். அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதாவது, கடந்த 2023, அக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்பதையும் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர், தங்களின் வாழ்க்கை துணையை சேர்க்கவும், நீக்கவும், புதிய நடைமுறையை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்திருக்கிறது.. அதாவது, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, மறுமணம் செய்தவர்கள், தங்களின் துணைவர் குறித்த தகவலை சேர்ப்பதில் நடைமுறை சிக்கல் இருந்து வந்தது..
இதைத்தான் தற்போது அரசு எளிமைப்படுத்தியிருக்கிறது.. இதற்காக "இணைப்பு ஜெ" என்ற புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாஸ்பார்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "
ஆண்டுதோறும் பாஸ்போர்ட்
"வேலை, படிப்பு, சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பல லட்சம் மக்கள் ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். பாஸ்போர்ட் பெறுவதில் சில விதிமுறைகளை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவந்தது.
இந்நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. அதில், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக இணைப்பு ஜே' (Annexure J) எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
பிரமாணப் பத்திரம்
இந்த நடவடிக்கை, விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இணைப்பு ஜே' என்பது எளிமைப்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரமாகும், இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை முறையாக அறிவித்து, பாஸ்போர்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க (அல்லது நீக்க) கூட்டாகக் கோருகின்றனர். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த சீர்திருத்தத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும் தகவலுக்கு https://www.passportindia.gov.in/psp என்ற அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் சேவா இணையதளத்தைப் பார்வையிடலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications