ஷாக்..10 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய பாஜக! எடப்பாடியே எதிர்பார்த்திருக்க மாட்டார்!
சென்னை: லோக்சபா தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் புதுச்சேரியில் திமுக கூட்டணி முதன்மை வகிக்கிறது. அதே நேரத்தில் சுமார் பத்து தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பாஜக கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் வீசி வந்த அரசியல் புயல் இன்று ஓயவிருக்கிறது. தேர்தல் புயல் ஓய்ந்தாலும் ஆட்சியமைப்பு உள்ளிட்ட பல விவகாரங்களில் இதற்குப் பிறகு பல சூறாவளிகளையும் நாம் சந்திக்க வேண்டி இருக்கும்.

இந்தியாவின் 18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவைத் தேர்தல் ஆனது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
400 மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பிரதமர் நரேந்திர மோடியும் அந்த கட்சியின் முக்கிய தலைவருமான அமித்ஷாவும் சூளுரைத்தனர். அதற்கேற்றார் போல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்றே கணித்தனர். இதனால் உற்சாகத்தில் இருந்தனர் பாஜக தலைவர்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.
290க்கும் மேற்பட்ட தொகுதிகளிலேயே பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கடும் போட்டி அளித்து வரும் இந்தியா கூட்டணி 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளின் தயவிலேயே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு இருக்கிறது. இதனை அந்த கட்சி நிர்வாகிகள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் தென் மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு ஓரளவு உயர்ந்திருப்பதை காண முடிகிறது. கர்நாடகா தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக பலம் கொண்ட நிலையில் தற்போது ஓரளவு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக கேரளாவில் கட்சிக்கு இரண்டு எம்பிக்கள் கிடைப்பார்கள் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு புதுவையில் மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பெரிய அளவில் திமுக கூட்டணிக்கு நெருக்கடி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பலத்த பின்னடைவை சந்தித்து இருக்கிறது. ஒரு தொகுதியில் கூட அந்த கட்சி முன்னிலை பெற முடியவில்லை. அதே நேரத்தில் பாஜக பெரிய அளவில் இந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறது. குறிப்பாக தமிழகம் புதுவையில் 10 தொகுதிகளில் அந்த கட்சி வேட்பாளர்களும் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கின்றனர்.
அந்த வகையில் தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணி முதலிடத்திலும், நீலகிரி தொகுதியில் மத்திய அமைச்சர் எல் .முருகன், மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம், தென் சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன், கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், நெல்லையில் நயினார் நாகேந்திரன், வேலூரில் ஏசி சண்முகம், தேனியில் டிடிவி தினகரன், புதுச்சேரியில் நமசிவாயம் ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கின்றனர்.
இதனால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அந்த தொகுதிகளில் மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அண்ணாமலை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமில்லை எவ்வளவு வாக்கு சதவீதத்தை பெறுகிறோம் என்பது தான் முக்கியம் என பேசி இருந்தார். தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தாலும் நிறைய தொகுதிகளில் அந்த கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் நிறைய வாக்குகளை பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் அதிமுக தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications