"லட்டு" பாவங்கள்.. இந்துக்கள் மனதை புண்படுத்திட்டாங்க.. பரிதாபங்கள் சேனல் மீது தமிழ்நாடு பாஜக புகார்
சென்னை: பிரபல யூடியூப் சேனலான பரிதாபங்கள் சமீபத்தில் திருப்பதி லட்டு தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். இது இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்த போதே திடீரென அந்த வீடியோவை நீக்கி மன்னிப்பு கேட்டிருந்தனர். இதற்கிடையே இந்துக்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகப் பரிதாபங்கள் சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் பரிதாபங்கள் சேனல் மீது ஆந்திர போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலுக்கு உலகெங்கும் பக்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பார்கள்.

லட்டு சர்ச்சை: இங்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும். திருப்பதியில் வழங்கப்படும் லட்டு உலகப் பிரசித்தி பெற்றவை. இந்த திருப்பதி லட்டிற்குப் பயன்படுத்தப்படும் லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்திருப்பதாகச் சமீபத்தில் சர்ச்சை கிளம்பியது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து இது தொடர்பான ஆய்வக முடிவுகளையும் அவரது கட்சியினர் வெளியிட்டனர். அதன் பிறகு கோயிலில் பரிகாரம் எல்லாம் செய்யப்பட்டது.
லட்டு வீடியோ: இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே பிரபல யூடியூப் சேனலான பரிதாபங்கள் சமீபத்தில் இந்த திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே அது டிரெண்டானது. இருப்பினும், டிரெண்டிங்கில் இருந்த போதே அது திடீரென டெலிட் செய்யப்பட்டது. மேலும், இந்த வீடியோவை வெளியிட்டதற்காகப் பரிதாபங்கள் சேனல் மன்னிப்பும் கேட்டது.
புகார்: இந்தச் சூழலில் பரிதாபங்கள் சேனல் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநில தலைவர் ஆந்திர காவல் துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.. அதாவது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வெறுப்பைப் பரப்பும் வகையில், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த வீடியோ நீக்கப்பட்டு இருந்தாலும் இதனால் இந்துக்களின் உணர்வுகள் அவமதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மத அடிப்படையில் இரு தரப்பிற்கும் இடையே மோதலை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அமர் பிரசாத் ரெட்டி: இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில், "லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் அவதூறான வீடியோவை வெளியிட்டதற்காக பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி, ஆந்திரப் பிரதேச டிஜிபியிடம் புகாரை அளித்துள்ளேன். பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா ஒப்புதலுடன் இதனைச் செய்துள்ளேன்.
அவர்கள் அந்த வீடியோவை நீக்கப்பட்டு இருந்தாலும், அது இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பது மட்டுமல்லாமல்.. இரு சமூகங்களுக்கு இடையே பகையைப் பரப்பவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது.
அவமதிக்கும் செயல்: மேலும், இது அரசு பொறுப்பில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை அவமதிக்கும் வகையில் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர போலீசார் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகிறோம். இத்தகைய வெறுப்பு மற்றும் அவதூறு பரப்பும் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.. மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கை தேவை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications