எப்படி நடந்தது? போனதெல்லாம் யாரு? வெலவெலத்த அதிமுக.. திணறிய பாஜக.. பின்னணியில் செந்தில் பாலாஜி!
சென்னை: திமுக சார்பாக நேற்று நடத்தப்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் கூட்டம்.. அதிமுக, பாஜகவினர் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் கோவை, ஈரோடு, திருப்பூர் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று கோவையில் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டார். முக்கியமாக மக்களுக்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதை தொடர்ந்து நேற்று மாலை மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம் 55000 பேர் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக, பாஜக, தேமுதிக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

என்ன பிளான்?
முக்கியமாக கவுண்டர் சமூகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள், நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் நேற்று திமுகவில் இணைந்தனர். நேற்று திமுகவிற்கு வந்தவர்களில் அதிமுக, பாஜக, தேமுதிகவை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்று கூறப்படுகிறது. பாஜகவை சேர்ந்த மைதிலி வினோ, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைந்தனர். தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தினகரன் திமுகவில் இணைந்தார். இதுதான் தற்போது எதிர்க்கட்சிகள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

விவாதம்
முதலில் இத்தனை பேரை எப்படி திமுக தட்டி தூக்கியது என்று எதிர்க்கட்சிகள் குழப்பம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் கடந்த 4 மாதமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளன. கடந்த 1 மாதத்திற்கு முன்பே இந்த இணைப்பு விழா நடக்க வேண்டியது. ஆனால் அப்போது மழை காரணமாக இந்த நிகழ்வு நடக்கவில்லை. அதன்பின் ஒரு மாதம் கழித்து கூட்டம் நடந்துள்ளது. அப்படி என்றால் இத்தனை நாட்கள் திமுகவில் இணைய வேண்டியவர்கள், மாற்று கட்சியில் உறுப்பினர்களாக அமைதியாக இருந்துள்ளனர்.

நேரம்
நேரம் பார்த்து திமுகவில் இணைந்துள்ளனர். இதில் மைதிலி வினோ மட்டுமே நேற்று முதல்நாள் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இவர் செந்தில் பாலாஜியுடன் பேசியதாக தகவல் கசிந்த காரணத்தால் அவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். மற்றபடி அதிமுக, பாஜக என்று யாருக்கும் தங்கள் கட்சியில் இருந்து இத்தனை பேர் திமுக பக்கம் செல்வார்கள் என்றே தெரியவில்லையாம். அதிலும் அதிமுக தரப்பு இந்த விஷயத்தால் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக அப்செட்
அதன்படி.. 55 ஆயிரம் பேர் திமுகவில் சேர்ந்து உள்ளனர். அதில் அதிமுகவில் இருந்து எத்தனை பேர் திமுகவில் சேர்ந்தனர். இவர்கள் எல்லாம் யார்? யார்? எந்த மாவட்ட செயலாளரின் கீழ் இவர்கள் வருகிறார்கள். இவர்களை எப்படி தவறவிட்டோம் என்று அதிமுக தரப்பு விசாரிக்க தொடங்கி உள்ளதாம். செந்தில் பாலாஜி கண்டிப்பாக அதிமுக நிர்வாகிகளை இழுப்பார் என்று அக்கட்சி எதிர்பார்த்தே இருந்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கைதான் அந்த கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

அதிர்ச்சி
இன்னொரு பக்கம் பாஜகவும் இதை பற்றி விசாரித்து வருகிறதாம். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அடுத்த வாரம் தமிழ்நாடு வருகிறார். சரியாக அவர் வருகிற நேரம் பார்த்து முக்கிய தலைகள் திமுக பக்கம் சென்றுள்ளனர். அடிமட்ட தொண்டர்கள் பலர் திமுகவில் இணைந்து உள்ளனர். இது எப்படி நடந்தது.. சறுக்கியது எங்கே என்று பாஜக மேல்மட்ட தலைவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications