"திடீர் ரெய்டு".. ஒன்று வானதி.. இல்லாவிட்டால் கமல்.. தட்டி தூக்கும் பாஜக.. திருப்பி அடிக்குமா மய்யம்
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: கமல் களமிறங்கிய பிறகு கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்று வருவதுடன், பல்வேறு பரபரப்புகளையும், எதிர்பார்ப்புகளையும், வியூகங்களையும், சந்தேகங்களையும், நித்தமும் ஏற்படுத்தி வருகிறது.
கமலை பொறுத்தவரை இந்த முறை முதல் முறையாக போட்டியிடுகிறார்.. பலம் குறைந்த கூட்டணி என்றாலும், முதல்வர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் கமல்.. கோவை தெற்கு தொகுதியை குறி வைத்துள்ளார்.
எதற்காக கமல் இந்த தொகுதியை குறி வைத்து களம் இறங்கினார் என்று ஏற்கனவே நாம் பலமுறை குறிப்பிட்டுள்ளோம்.. படித்தவர்கள், மாற்று அரசியலை விரும்புபவர்கள், சாதீய வாக்குகள், போன்றவைகளே பிரதான காரணமாக சொல்லப்படுகின்றன.
வாக்கு வங்கி
அதுமட்டுமல்ல, சென்ற முறை மக்களவை தேர்தலில் மநீம பெற்ற கணிசமான வாக்குகளே கமலுக்கு இந்த தெம்பை தந்துள்ளது.. அவர் போட்டியிடாமலேயே வாக்குகளை பெருமளவு பெற்றது மய்யம்.. அப்படி இருக்கும்போது கமல் நேரடியாகவே களம் இறங்கினால், வாக்கு வங்கி மேலும் கூடும் என்பதிலும் சந்தேகமில்லை.
பாஜக
ஆனால், கமல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட இது மட்டும்தான் காரணமா? வேறு ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்குமா என்ற சந்தேகங்களும் கிளம்பிய நிலையில், அதுகுறித்த அனுமான தகவல்களும் வெளியாகி வருகின்றன.. கோவை தெற்கு தொகுதியை பாஜகதான் கேட்டு கொண்டிருந்தது.. இறுதியில், அந்த தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கவிட்டது அதிமுக..
அதிருப்தி
இதுதான் அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது... போராட்டமும் நடத்தினர்.. பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டோம்.. மற்றவர்களையும் ஓட்டு போடவிடமாட்டோம் என்றுகூட சொல்லி வருகிறார்கள். அதனால் அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு முழுவதுமாக விழுமா என்பதுகூட சந்தேகம்தான். அதேசமயம், கம்யூனிஸ்ட் கட்சி இங்கு வலுவாக இருக்கிறது.. திமுகவை விட பலம் பொருந்தியும் இருக்கிறது..
அதிமுக
அதனால், அதிமுக கூட்டணி தோற்று திமுக இங்கு வெற்றி பெற்றுவிடுமோ என்ற ஐயம் பாஜக தரப்பில் இருந்து வருவதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, தினகரன் ஒருபக்கம் இறங்கி அதிமுகவின் வாக்குகளை மேலும் பிரிக்கக்கூடும் என்பதிலும் சந்தேகமில்லை. அதனாலேயே கமலை மறைமுகமாக பாஜக களம் இறக்கியிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. வெற்றி பெற்றால் வானதி, இல்லையென்றால் கமல் என்ற ரீதியில் பாஜக வியூகம் வகுத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
பி-டீம்
அதேசமயம், இந்த விஷயம் வேறு மாதிரியாக பார்க்கப்படுகிறது.. கமலை பொறுத்தவரை, நான் பாஜக பி டீம் இல்லை என்று சொல்லி கொண்டே இருக்கிறார்.. பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தி கொண்டே வருகின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென மய்ய நிர்வாகி வீட்டில் அந்த ரெய்டு நடந்தது.. பல கட்சிகளில் பல ரெய்டுகளை இந்த தமிழகம் பார்த்திருந்தாலும், கமல் கட்சி பிரமுகரிடம் நடந்த இந்த ரெயிடு பரபரப்பாக பேசப்பட்டது..
பிரச்சாரம்
காரணம், ஊழலுக்கு எதிரான கொள்கையையும், பிரச்சாரத்தையும் முன்னெடுத்து வரும் கமல் கட்சியிலா இப்படி ஒரு சம்பவம் என்ற அதிர்ச்சிதான் மேலிட்டது. அதுமட்டுமில்லை, கமல் மீது இதுவரை ஒரு ஊழல் புகாரும் இருந்ததில்லை.. தன்னுடைய வருமான வரி முதற்கொண்டு அனைத்திற்கும் பக்காவாக கணக்கு வைத்திருப்பவர்.. எந்தவிதத்திலும் அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டாதவாறு வெளிப்படையான, நேர்மையான மனிதராக கமல் திகழ்ந்து வருகிறார்..
தாக்கம்
இந்த ரெய்டு நடந்தது நிச்சயம் மய்யத்தில் ஒரு தாக்கத்தை தருவதாகவே இருக்கும். இந்த சம்பவத்துக்கும் இதே பாஜகவைதான் ஒரு சிலர் காரணம் சொல்கிறார்கள்... வானதியை வெற்றி பெற வைக்கவும், கமல் பெயரை டேமேஜ் செய்யவுமே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது. அதாவது, கோவை தெற்கில் கமலையும், தாராபுரத்தில் முருகனை எதிர்த்துப் போட்டியிடும் கயல்விழிக்கு ஆதரவாக வேலை செய்வோரையும் ஒரேடியாக முடக்கவேதான் இந்த திடீர் ரெய்டு என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
தெற்கு
எப்படி பார்த்தாலும் சரி, நேற்று வெளியிட்ட மய்யத்தின் நவீன தேர்தல் அறிக்கையும், தொகுதிக்குள் இயல்பாக பிரச்சாரம் செய்து மக்களை ஈர்த்து வரும் கமலின் போக்கும், கமலிடம் உள்ள அடிப்படை நேர்மையும் நிச்சயம் தெற்கு தொகுதியை வெற்றி பெற உதவும் என்றே நம்பப்படுகிறது.