நான் தான் பேசினேன்.. இனியும் பேசுவேன் 'முழு ஆடியோவை போடுங்க திமுக நண்பர்களே..' - அண்ணாமலை விளக்கம்!
சென்னை : நான் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ உண்மைதான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தான் பேசிய ஆடியோவில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும், சேர்த்தும் வெளியிட்டுள்ளனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம், பாஜகவினரின் திட்டமிட்ட அரசியல் எனக் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், மதுரை புறநகர் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனும் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோ தொடர்பாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்
அமைச்சர் பேசிய விஷயம்.. கெட்டியாக பிடித்துக்கொண்ட அண்ணாமலை.. 'எப்படி நம்புவாங்க?’- தொடர் விளாசல்!
விமான நிலைய சம்பவம்
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் கடந்த 13-ஆம் தேதி மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நிதி அமைச்சருக்கும் பாஜகவினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அமைச்சர் பிடிஆர் காரில் காலணியை வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் அக்கட்சியிலிருந்து விலகினார்.
சதி வேலை
அமைச்சர் பிடிஆர் மீது காலணி வீசி, அசம்பாவிதம் நடக்க சதி செய்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது திமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் ஒரு ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் காரில் காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரனுடன், மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் பரவியது.
எடிட் செய்த ஆடியோ
விஷமிகள் சிலர் அண்ணாமலை பேசியதாக ஒரு ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டது. பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், அந்த ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல என்றார். மேலும், ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டு தனக்கும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அவப்பெயர் ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் கிரைம் போலீசில் மகா சுசீந்திரன் புகார் அளித்தார்.
அண்ணாமலை விளக்கம்
இந்நிலையில், இன்று சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பேசிய ஆடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
போன் ஆடியோ
அதில், "எனது ஸ்டைல் வெளிப்படையான அரசியல் தான். ஒருவர் தவறு செய்யும்போது அதில் வெளிப்படையாக அரசியல் செய்யவேண்டியது எனது கடமை. எனது நிலைப்பாடு பாஜகவினர் அமைச்சரை எதிர்த்து தர்ணாவில் ஈடுபட்டிருக்க வேண்டும். அது அரசியல். யாரோ சிலர் செருப்பு எடுத்து வீசியதால், அந்தப் பிரச்சனை வேறு மாதிரியாக மாறிவிட்டது.
வெட்டி ஒட்டி வெளியிட்டுள்ளனர்
நான் பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோ உண்மை. ஆடியோவில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும், சேர்த்தும் வெளியிட்டுள்ளனர். தலைவர்களிடம் நான் பேசுவதை வெட்டியும், ஒட்டியும் வெளியிடுகிறார்கள் என்பதற்காக நான் ஒருவரிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ள முடியாது. அதனை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பேன். அந்த ஆடியோவை திமுகவினர் முழுமையாக வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.