ஒட்டுமொத்த திமுக ஐடி விங்கையும் ஜெயில்ல போடணும்.. வாய்ஸ் ஆஃப் சவுக்கு பிரதீப்புக்கு ஆதரவாக அண்ணாமலை!
வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் அட்மின் பிரதீப்புக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார் அண்ணாமலை.
சென்னை : "ஒரு ட்ரோல் வீடியோவை வெளியிட்டதற்கு கைது நடவடிக்கை என்றால், ஒட்டுமொத்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும்." என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் அறிவிப்பு குறித்து ட்விட்டரில் கீழ்த்தரமாக விமர்சித்த வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் அட்மின் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரூ. 1000
2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தகுதியுள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். நீண்ட நாட்களாக இது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இழிவாக சித்தரித்து பதிவு
அதேசமயம், தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் இத்திட்டத்திற்கு தகுதியான பெண்களை முதலமைச்சர் ஸ்டாலினும், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் எப்படி தேர்வு செய்வார்கள் என்பது குறித்து வாய்ஸ் ஆஃப் சவுக்கு சங்கர் என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு சினிமா நகைச்சுவை நகைச்சுவை காட்சியை பகிர்ந்து விமர்சிக்கப்பட்டிருந்தது.

திமுக புகார்
இந்தப் பதிவு முதலமைச்சர் ஸ்டாலின், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மட்டுமில்லாது தமிழ்நாட்டு பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பதிவை பகிர்ந்த ட்விட்டர் பக்கத்தின் அட்மினை கைது செய்யக்கோரியும், ட்விட்டர் பக்கத்தை முடக்கவும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

அட்மின் கைது
இந்நிலையில், வாய்ஸ் ஆஃப் சவுக்கு ட்விட்டர் பக்கத்தின் அட்மின்களில் ஒருவரான பிரதீப் சென்னை போலீசாரால் நேற்று இரவு 11.30 மணிக்கு கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி கொடுத்த புகாரின் பேரில் பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை கண்டனம்
இந்த கைது நடவடிக்கைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அண்ணாமலையின் ட்விட்டர் பதிவுகளில், "அதிகாரங்கள் ஒரு குடும்பத்தின் கையில் குவிந்தால் ஜனநாயகம் எதேச்சதிகாரமாக மாறி, எந்த நேரத்திலும் சர்வாதிகார அரசாக மாறலாம். ஒரு சிறிய விமர்சனத்திற்கே திமுக அரசு பதறிப்போயுள்ளது. சமூக ஊடக பதிவுக்காக ஒரு நபரை கைது செய்வதன் மூலம் தனது சர்வாதிகார நடத்தையை வெளிப்படுத்தியுள்ளது திமுக அரசு. திமுகவின் உத்தரவின் பேரில் வாய்ஸ் ஆஃப் சவுக்கு அட்மின் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

திமுக ஐடி விங்கில் அனைவரையும்
ஒரு ட்ரோல் வீடியோவை வெளியிட்டதற்கு கைது நடவடிக்கை என்றால், ஒட்டுமொத்த திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும். ஏனென்றால் அதுதானே அவர்களின் முழுநேர வேலையே. கருத்து சுதந்திரத்தை தடுப்பது, நள்ளிரவு கைதுகள், எதையும் செய்யாமல் சுய விளம்பரங்கள் என ஒரு பாசிஸ்டின் குணாதிசயங்கள் கொண்டவராக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்." என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications