அரண்டுபோன அண்ணாமலை.. சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே! பொம்மையால் தவிடு பொடியான தமிழ்நாடு பாஜக கணக்கு
சென்னை: தமிழ்நாட்டில் திமுக கடந்த முறையில் கையில் எடுத்த விசயத்தையே, அதற்கு எதிராக பயன்படுத்த நினைத்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கணக்கு தவிடுபொடியாகியுள்ளது.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கிய வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடாமல், உள்ளூர் பாசனத்திற்கும், கர்நாடகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு நீரை திறந்து விடுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீதிமன்றத் தீர்ப்புப்படி வந்து சேர வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை.

இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொள்ளும் வகையில், கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து 5 டெல்டா மாவட்ட விவசாயிகள் லட்சம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பினை மேற்கொண்டனர்.
ஆனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் வாய்க்கால்களுக்கும், கடைமடைப் பகுதிகளுக்கும் செல்லாததால் அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே கர்நாடக அரசு முறைப்பட வழங்க வேண்டிய நீரை வழங்காததால் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு லட்சக்கணக்கான பயிர்கள் கருகின. கே.ஆர்.எஸ். அணை, கபினி அணைகளுக்கு 65,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தபோதுகூட கர்நாடக அரசு வெறும் 12,000 கனஅடி நீரை மட்டுமே வெளியேற்றியது.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 92,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கிளை ஆறுகளில் தேவையான அளவுக்கு நீர் வரத்து இல்லாததன் காரணமாக வயல்களில் நீர் வராததால், இலக்கை எட்ட முடியவில்லை. குறுவை சாகுபடிக்கு பல லட்சங்களை விவசாயிகள் செலவு செய்த நிலையில், காவிரியில் நீர் திறந்துவிடாததன் காரணமாக பயிர்கள் கருகியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் நிலையில், இதை வைத்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஆளும் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க பாஜக திட்டமிட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இதுபற்றி பேசி வந்தார்.
கர்நாடகா காங்கிரஸ் அரசையும், அம்மாநில துணை முதலமைச்சர் சிவகுமாரையும் காவிரி விவகாரத்தில் கண்டிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமில்லை என அண்ணாமலை விமர்சித்தார். பெங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள பெங்களூரு செல்லக் கூடாது என்றும், அப்படி அவர் சென்றால் தமிழ்நாடு வரும்போது, கோ பேக் ஸ்டாலின் சொல்லி, கருப்பு பலுான்களை பறக்க விடுவோம் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த விவகாரத்தை வைத்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக மக்களின் மனநிலையை திருப்ப நினைத்த அண்ணாமலையின் வியூகத்தை அடித்து நொறுக்கி உள்ளார், அவரது கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை. அவர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக காவிரி விவகாரத்தை திமுக அரசுக்கு எதிராக பாஜக திருப்புவது கடினமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications