வழக்கம்போல கம்பி கட்டுற கதை.. 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பேன்: மனோ தங்கராஜை டார்கெட் செய்த அண்ணாமலை!
சென்னை: “கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.. நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.” என அண்ணாமலை கூறியுள்ளார்.
ஆவின் பால் நிறுவனம், பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு டிலைட் என்ற பெயரில் ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்து இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து கடந்த சில நாட்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தின் பாலில் கொழுப்பு அளவு குறைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இதுகுறித்த ஆய்வறிக்கை என்றும் ஒரு பதிவை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
பதிலுக்கு பதில்: இதற்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், “அறிவாளி ரோலக்ஸ் வாட்ச் கட்டிக்கொண்டு ஒரு ரிப்போர்ட்டை சொல்கிறார். அதில் என்ன உண்மை இருக்கிறது? வடநாட்டில் இருக்கிற நிறுவனங்களை இங்கே கொண்டு வர வேண்டும் என்று நோக்கத்தோடு, அதற்கு கைக்கூலிகளாக, அதற்கு கையூட்டு பெற்று விட்டு செயல்படுகிறார்கள்” என விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலடியாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, "மனோ தங்கராஜ் அவர்களே, உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும்.
அமைச்சர் பதிலடி: உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது, தமிழக மக்களுக்கும் ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு." என்று குறிப்பிட்டு இருந்தார். அண்ணாமலையின் இந்தப் பதிவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் பதிலளித்தார்.
அதில், “ரஃபேல் வாட்ச் கட்டி ஆடு மேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டுகைக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும், பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்; கலைஞரின் உடன்பிறப்புகள்; தளபதியின் தம்பிகள்; தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்!" என்றார்.
மீண்டும் அண்ணாமலை அட்டாக்: இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் பதில் அளித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அண்ணாமலை. அவரது பதிவில், “கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.. நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.
ஏற்கனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்குப் பயந்து கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.
நஷ்ட ஈடு கோரி வழக்கு: ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்குப் பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களை போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு.” எனத் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications