தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லா மாவட்டங்கள் பெயரையுமா சொல்றாங்க.. அண்ணாமலை கேள்வி
மத்திய அமைச்சர் கிஷன்குமார் ரெட்டி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கிஷன்குமார்,கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கினார். “10 ஆண்டு பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ரூ.2.9 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு அளிக்கும் நிதி தொடர்ந்து உயர்த்தி கொடுக்கப்பட்டு வருகிறது.
துறை ரீதியாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று. அந்த நிதியில் தமிழ்நாட்டிலும் பணிகள் நடைபெறும். காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது, பாஜக ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பெயரை குறிப்பிடவில்லை என்பதற்காக புறக்கணிக்கிறோம் என்பது உண்மையில்லை.” என்றார்.

அண்ணாமலை பேசும்போது, “எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோடுகிறார்கள். மத்திய அரசு ஜவுளி பூங்கா கொடுத்தும், மாநில அரசு எதையும் செய்வதில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் கட்டுவற்கு மரம் வெட்ட சொல்லி 8 மாதங்கள் ஆகின்றன. தமிழக அரசுக்கு எதிலும் அக்கறை இல்லை. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்களில் எல்லா மாவட்டங்களின் பெயர்களும் இடம்பெறுகின்றனவா. மத்திய பட்ஜெட்டில் பாஜக ஆளும் மாநிலங்களின் பெயரையும் கூடத்தான் குறிப்பிடவில்லை. அரசியல் பேசுவற்காக பொய் பேசி வருகிறார்கள். தமிழ்நாட்டை புறக்கணிக்கவில்லை.
நாங்கள் எங்கும் சண்டையிடவில்லை. பெயரை சொல்லவில்லை என்பதற்காக போராட்டம் நடத்துவது முட்டாள்தனம். இதேபோல நாளைக்கு மாநில அரசின் பட்ஜெட்டில், எங்கள் ஊரின் பெயரை குறிப்பிடவில்லை என மக்கள் போராட்டத்தில் இறங்கினால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் ஆட்சி நடத்த முடியுமா. பிரச்சினை மாநில அரசிடம் தான் உள்ளது. மின்சாரத்துறையை நஷ்டத்தில் வைத்துள்ளனர். தகுடு வேலை செய்து மின்சார கட்டணத்தை வைத்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் மு.க. ஸ்டாலின் இரண்டாம் தரமாக பார்ப்பதால்தான் கால தாமதம் ஏற்படுகிறது. அதனால் எங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.
மெட்ரோ ரயில் மத்திய, மாநில அரசுகள், வெளி நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம். இதை ஏதோ மத்திய அரசின் திட்டம் போல பேசுகிறார்கள். ஒரே நேரத்தில் அனைத்து தரப்பில் இருந்தும் நிதி வந்துவிடாது. இதற்கு பலமுறை விளக்கம் கொடுத்தும் மாநில அரசு தவறான தகவல்களை பரப்புகிறது.” என்றார்.












Click it and Unblock the Notifications