கூட்டணிக்காக நான் யாருக்கும் சலாம் போடமாட்டேன்.. பரபரத்த அண்ணாமலை! ஜே.பி. நட்டாவின் பேச்சை மீறினாரா?
கூட்டணிக்காக யாருக்கும் நான் சலாம் போடமாட்டேன்- அண்ணாமலை
சென்னை: கூட்டணிக்காக நான் யாருக்கும் சலாம் போடமாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவில் ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைவதற்கு முன்பே அதிமுக- பாஜக உறவில் விரிசல் எழுந்தது.
அதிமுக, பாஜக தலைமைகளை தாண்டி இரு தரப்பினரும் ஆளாளுக்கு ஒவ்வொன்றை பேசியதால் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. அதிமுக எம்எல்ஏக்களுக்கு சட்டசபையில் திமுகவை எதிர்த்து பேச ஆண்மை இல்லை என நயினார் நாகேந்திரன் பேசியது முதல் இருவருக்கும் மோதல்தான்.

அப்பட்டம்
இது அப்பட்டமாக தெரிந்தாலும் அதை இரு கட்சிகளின் தலைமையும் ஒப்புக் கொள்ளவில்லை. கூட்டணி இருப்பதாகவே கூறி வந்தனர். இந்த நிலையில்தான் சின்ன பிரச்சினைகளுக்கு மத்தியில் சிடிஆர் நிர்மல் குமார் உள்பட ஏராளமானோர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டி, கூட்டணி கட்சியாக இருந்து கொண்டு இப்படி செய்திருக்கக் கூடாது என விமர்சித்திருந்தார்.

ஆளும் கட்சியாக வாய்ப்பில்லை
மேலும் இனி அதிமுக ஆளும்கட்சியாக வாய்ப்பில்லை என்பது போல் ஒரு கருத்தையும் கூறியிருந்தார். அது போல் சிடிஆர் நிர்மல் குமார் விவகாரம் குறித்து அண்ணாமலை பேசியபோது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமை பண்புடன் தன்னை ஒப்பிட்டு பேசினார். இதற்கு அதிமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். அது போல் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகள் எரித்தனர். இதற்காக அந்த நிர்வாகிகளை இரவில் நீக்கிவிட்டு மறுநாள் அந்த நீக்கத்தை ரத்து செய்துவிட்டார் அண்ணாமலை. இது அதிமுக மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மாநில நிர்வாகிகள்
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்வில்தான் மாநில தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில் கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.

கூட்டணி முடிவு
கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிடக் கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை. தனித்து போட்டியிட விருப்பம். பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என பரபரப்பான கருத்தை அண்ணாமலை கூறியிருந்தார்.

வானதி சீனிவாசன்
இந்த நிலையில் இதுகுறித்து வானதி சீனிவாசன் பேசுகையில் தேர்தல் தொடர்பான முடிவை பேசும் நேரம் இதுவல்ல. கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு எடுக்கும். பாஜக உயர் மட்ட குழுவில் இதுகுறித்து பேச வேண்டும் என தெரிவித்திருந்தார். வானதியை போல் மற்ற தலைவர்களும் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரிக்கு வந்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பாஜகவில் அதிமுகவுக்கு எதிராக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் இது போன்ற விஷயங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என நட்டா அறிவுரை வழங்கியதாக வானதி தெரிவித்திருந்தார். அப்படியிருக்கும் போது ஜே பி நட்டாவின் அறிவுரையை மீறுவது போல் அண்ணாமலை இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications