அதிமுக- பாஜக கூட்டணி மோதல்! மார்ச் 26ல் பிரதமர் மோடி, நட்டாவை சந்திக்கிறார் அண்ணாமலை? ஏன் என்னாச்சு?
அதிமுகவுடன் கூட்டணி குறித்த மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் அண்ணாமலை
சென்னை: அதிமுக- பாஜக இடையே கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியையும் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேச திட்டமிட்டிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அண்ணாமலை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்ற விளக்கத்தை அண்ணாமலை கூறுவார் என தெரிகிறது.
அதிமுக- பாஜக கூட்டணியில் 4 எம்எல்ஏக்களை பெற்ற அண்ணாமலை திடீரென அந்த கூட்டணிக்கு எதிரான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதை அந்த கட்சியினரே விரும்பவில்லை.

அண்ணாமலை பேச்சு
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்வில்தான் மாநில தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசுகையில் கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன்.

கூட்டணி முடிவு
கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிடக் கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டு குனிந்து செல்ல விரும்பவில்லை. தனித்து போட்டியிட விருப்பம். பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என பரபரப்பான கருத்தை அண்ணாமலை கூறியிருந்தார்.

பொறுமை
இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்த அண்ணாமலை திடீரென அதிமுக மீது நெருப்பை அள்ளி கொட்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிடிஆர் நிர்மல் குமார், திலீப் கண்ணன் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளின் விலகலுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என அண்ணாமலை கருதுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிதறு தேங்காய்
இல்லாவிட்டால் அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்கெனவே ஏற்பட்ட அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஏதேனும் பிரச்சினை எழுந்ததால் இந்த முடிவை அண்ணாமலை எடுத்தாரா என தெரியவில்லை. மேலும் எப்போது கூட்டணி குறித்து கேட்டாலும் அதை தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வந்த அண்ணாமலையா இப்படி அதிமுகவுடன் கூட்டணி இல்லை என சிதறு தேங்காய் உடைத்தது போல் சொல்வது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மூத்த நிர்வாகிகள்
இந்த நிலையில் பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாகவும் , அதை கெடுக்கும் செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவே அறிவுறுத்தியிருந்த நிலையில் அவரது பேச்சுக்கு எதிர் பேச்சாக அண்ணாமலை இப்படி பேசியிருக்கக் கூடாது என்பது பாஜக நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

பாஜக தலைமை
இந்த நிலையில் சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது போல் வரும் 26 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, ஜே.பி.நட்டா, அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அண்ணாமலை சந்திக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் அப்போது அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற தனது கருத்தை அவர்களிடம் தெரிவிப்பார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications