வீட்டிற்கே சென்ற பிஎல் சந்தோஷ்.. குமுறிய அண்ணாமலை.. 1 மணி நேரம் ஆலோசனை
சென்னை: தமிழ்நாட்டில் எப்படியாவது திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, தங்கள் கூட்டணியை அரியணை ஏற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் பாஜகவில் உள்கட்சி பூசல், கூட்டணியில் விரிசல் போன்ற பிரச்சனைகள் பூதாகரமாகி வருகின்றன. அண்ணாமலை அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னை வந்த பிஎல் சந்தோஷ் அண்ணாமலையின் வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் அண்ணாமலை தன் மனகுமுறல்களை கொட்டியதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் 2026 தேர்தலுக்காக இப்போதிருந்தே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக தமிழ்நாடு வந்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார். டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாடு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், தினகரன் வெளியேறியது, செங்கோட்டையனின் கலக குரல், கூட்டணி கட்சி தலைவர்களின் அதிருப்தி குரல் ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. முக்கியமாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மீதும் பல்வேறு மோசடி புகார்கள் எழுந்து வருகின்றன.
அப்செட்
இந்நிலையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் சென்னை ஈசிஆர் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உடல்நலக்குறைவு காரணமாக இதில் அண்ணாமலை கலந்து கொள்ள மாட்டார் என்று முதலில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் கூட்டத்தில் கலந்து கொண்டார். உடல்நலக்குறைவுடன், சமீபகாலமாக அண்ணாமலை மீது பாஜக நிர்வாகிகளே பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருவதில் அவர் மிகவும் அப்செட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
பி.எல் சந்தோஷ் - அண்ணாமலை ஆலோசனை
இதுகுறித்து பாஜக நிர்வாகிகள் கூறுகையில், "ஏற்கனவே டெல்லியில் மத்திய உள்துறை அமித்ஷா தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. இன்றைய கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதன் காரணமாக பிஎல் சந்தோஷ் நேரடியாக அண்ணாமலையின் வீட்டுக்கே சென்றுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணாமலை வீட்டில் பி.எல் சந்தோஷ், அண்ணாமலை சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். அண்ணாமலை தொடர்ந்து கட்சி நிகழ்வுகளை புறக்கணிப்பது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை சரிசெய்வதற்காக தான் சந்தோஷ் நேரடியாக அண்ணாமலையிடம் பேசியுள்ளார். அப்போது அண்ணாமலை கட்சி நலனுக்காக தான் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தேன்.
அண்ணாமலை குமுறல்
எனக்கு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. இங்குள்ள நிர்வாகிகளே சிண்டிகேட் போட்டு தனக்கு எதிராக பொய் புகார்களை பரப்புகிறார்கள் என்று அண்ணாமலை தன் வேதனையை பகிர்ந்துள்ளார். அவரின் குறைகளை முழுமையாக கேட்ட சந்தோஷ், கவலை வேண்டாம். இதுகுறித்து தேசிய தலைமையிடம் பேசி விரைவில் தீர்வு காண்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்.
அதன் பிறகு சந்தோஷ், அண்ணாமலை இருவரும் இணைந்து பாஜக மையக்குழு கூட்டத்திற்கு சென்றுள்ளனர். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்கான திட்டத்தை அண்ணாமலை தான் வகுத்துள்ளார். வருகின்ற நாட்களில் பாஜக மற்றும் எங்கள் கூட்டணியில் உள்ள பிரச்சனைகள் முழுமையாக விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்றனர்.












Click it and Unblock the Notifications