மயிலாப்பூரில் மாற்றி யோசித்த தமிழிசை.. ட்ரோன் பிரசாரத்தால் இரவில் ஒளிர்ந்த வானம்! அடேங்கப்பா
சென்னை: சென்னை மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் இரவில் தாமரை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு ட்ரோன் மூலம் வித்தியாசமாக பிரசாரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
தற்போது அனைத்து துறைகளிலும் ட்ரோன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நாடுகளுக்கு இடையேயான போரில் துல்லிய தாக்குதல் நடத்துவது முதல் உணவு டெலிவரி செய்வது வரை ட்ரோன்கள் இல்லாத இடமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. இதுதவிர விவசாயம், மருந்து சப்ளை, நில அளவீடு, மீட்பு பணி, எல்லைகளில் கண்காணிப்பு பணி உள்பட ட்ரோன் இல்லாத இடமே இல்லை என்ற நிலை வந்துவிட்டது.

இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தலில் பிரசார பணிக்கும் ட்ரோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம், உண்மை தான். ட்ரோன் பிரசாரத்தை முன்னெடுத்து இருப்பவர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தான்.
ட்ரோன் பிரசாரம்
சென்னை மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அவர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் பம்பரமாக சுழன்று தமிழிசை சவுந்தரராஜன் வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் தான் இரவில் தமிழிசை சவுந்தராஜன் ட்ரோன் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
எப்படி சாத்தியம்?
இரவு நேரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் வாக்கு சேகரித்து வரும்போது இன்னொரு பகுதிகளில் ட்ரோன் மூலம் ஓட்டு கேட்கப்படுகிறது. அதாவது இரவில் ட்ரோன் வானில் பறக்கிறது. அந்த ட்ரோனின் கீழ்பகுதியில் ஒளிரும் பட்டை இணைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் தாமரை சின்னம் ஆகியவை மாறி மாறி அந்த பட்டையில் ஒளிர்கிறது.
கவனம் ஈர்க்கும் ட்ரோன்
தொகுதிக்கு உட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில் இந்த பிரசாரத்தை தமிழிசை முன்னெடுத்துள்ளார். இருள் சூழ்ந்த வானத்தில் திடீரென்று ட்ரோனில் இருந்து தலைவர்களின் உருவம், தாமரை சின்னம் தெரிவதால் மக்களின் கவனம் உடனடியாக அங்கு செல்கிறது. இதன்மூலம் எளிதாக மக்களின் கவனத்தை ஈர்க்க முடிகிறது என்கின்றனர் பாஜகவினர். இப்படியாக தமிழிசை சவுந்தராஜன் மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications