"நீங்க தான் திராவிட சிங்கம் ஆச்சே.." பீகாருக்கு போன ஸ்டாலின்.. உடனே சரமாரியாக விமர்சித்த பாஜக
பாட்னா: வாக்காளர் திருட்டு தொடர்பாக பீகாரில் நடைபெறும் பேரணியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இது தமிழக அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது. பாஜக தலைவர்கள் பலரும் ஸ்டாலினுக்கு எதிராகக் காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளனர். கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் பீகார் மக்கள் குறித்து மோசமாகப் பேசியிருப்பதாகவும் அதேபோல இன்று ஸ்டாலினால் பேச முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை பீகார் சென்றார். வாக்கு திருட்டு தொடர்பாக அங்கு ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் யாத்திரை நடத்தி வரும் சூழலில், அதில் ஸ்டாலினும் இன்று கலந்து கொண்டார். மேலும், அங்குப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பாஜகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

பாஜக பாய்ச்சல்
இதற்கிடையே ஸ்டாலினின் பீகார் பயணத்தை பாஜக அரசியல் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். கடந்த காலங்களில் பீகார் விரோதச் சனாதன விரோதக் கருத்துகளைக் கூறியுள்ள திமுக, இந்த முறை பீகாருக்கு போய் அதே கருத்துகளைச் சொல்லுமா எனப் பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில், "பீகார் செல்லும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், உங்களுக்குத் தைரியமிருந்தால், உங்கள் மகன் உதயநிதி கூறிய சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும்' என்ற கருத்தை அங்குப் பேச முடியுமா?
திராவிட சிங்கம்
மேலும், உங்கள் உறவினரும், திமுக மக்களவை உறுப்பினருமான தயாநிதி மாறன் கூறிய "பீகாரிகள் தமிழகத்தில் கழிப்பறைகளைக் கழுவுகிறார்கள்" என்ற கருத்தை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா? நீங்கள் தான் கொள்கை குன்றாயிற்றே? நீங்கள் தான் திராவிட மாடல் சுய மரியாதை சிங்கமாயிற்றே? சொல்லுங்கள் பார்ப்போம்!!" என்று அவர் விமர்சித்துள்ளார்.
அண்ணாமலை
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலையும் கிட்டத்தட்ட இதே கருத்துகளை முன்வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பீகாரில் இருக்கிறார். எங்கள் பீகாரி சகோதர சகோதரிகள் குறித்து அவரும், அவரது தலைவர்களும், அவரது கூட்டணிக் கட்சியினரும் பல முறை மோசமான கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்கள். இன்று ராகுல் காந்தியுடன் பீகாரில் மேடை ஏறும் ஸ்டாலின், கடந்த காலங்களில் தனது கட்சித் தலைவர்கள் பீகார் மக்கள் குறித்து கேலி செய்ததைக் குறிப்பிடுவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
நாராயணன் திருப்பதி இன்னொரு ட்வீட்டில், "உங்கள் திமுக தலைவர்கள் பீகாரிகளைப் படிப்பறிவில்லாதவர்கள், பானி பூரி விற்பவர்கள், கழிப்பறை சுத்தம் செய்பவர்கள் என்று தமிழ்நாட்டில் இழிவுபடுத்தி வருகிறார்கள். பீகாரிகளை நீங்கள் அவமானப்படுத்திவிட்டு, இப்போது அங்கே செல்கிறீர்கள். முதலில் பீகாரி மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஸ்டாலின் "பீகாருக்கு எதிரானவர்" என்று விமர்சித்துள்ள நாராயணன் "வாக்குகளுக்காக அங்கே செல்கிறீர்கள். இதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று கேள்வியெழுப்பினார். ஸ்டாலினின் இந்தப் பயணம் சுயநல நோக்கம் கொண்டது என்றும் அவர் சாடினார்.
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியும் தேஜஸ்வி யாதவ்வும் பீகாரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள். பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அதை மனதில் வைத்தே இந்த யாத்திரை நடைபெறுகிறது. பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் சூழலில், இன்று ஸ்டாலின் கலந்து கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications