அதிரடி.. நேராக ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்த அண்ணாமலை.. பரபர புகார்.. கவனிக்கும் திமுக..ஏன் தெரியுமா?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திடீரென ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்தார்.
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக்கூறியும், கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து இன்று சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவினர் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று இரவு சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்என் ரவியை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பரபரப்பான புகார்களை அளித்தார். இந்த சந்திப்பு பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடக்கும் நிலையில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கோவை கார் வெடிப்பு, பாஜக, ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை சுட்டிக்காட்டி பாஜக இந்த குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறது.
மேலும் ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கூட அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதோடு இந்த ஆட்சிக்காலத்தில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

ராணுவ வீரர் கொலை
இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர்நகரில் ஏற்பட்ட பிரச்சனையில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டார். பிரபுவின் குடும்பத்துக்கும் அதேபேகுதியை சேர்ந்த திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் சின்னசாமி உள்பட சிலர் பிரபு உள்பட அவரது குடும்பத்தினரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த பிரபு சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி இறந்தார்.

பாஜக, அதிமுக கண்டிப்பு
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக, அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ராணுவ வீரருக்கே பாதுகாப்பு இல்லை என திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுன்சிலர் சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன், உள்ளிட்டர்வகளை கைது செய்தனர். இந்த கொலையில் அரசியல் சாயம் இல்லை. இது இருகுடும்பத்துக்கும் இடையேயான பிரச்சனையில் கொலை நடந்துள்ளது. பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்தார்.

ஆளுநருடன் அண்ணாமலை சந்திப்பு
இந்நிலையில் தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்தும், ஆளும் திமுக அரசுக்கு எதிராக இன்று சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் அண்ணாமலை உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அதன்பிறகு மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர். இதையடுத்து இன்று இரவு அண்ணாமலை, ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

புகார் மனுவில் இருப்பது என்ன?
அதன்படி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அண்ணாமலை, ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்தார். பாஜக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அண்ணாமலையுடன் உடன் சென்றிருந்தனர். இந்த வேளையில் மாநிலத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ராணுவ வீரர் பிரபு கொலை தொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அண்ணாமலை கூறியது என்ன?
இதுபற்றி அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛இந்திய ஆயுத படைகளின் முன்னாள் வீரர்கள் மற்றும் பாஜக தலைவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்தேன். மாநிலத்தில் நிலவும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதில் தலையீட்டு தீர்வு காண வேண்டும் என மனு அளித்து கோரிக்கை விடுத்தோம்'' என கூறியுள்ளார். இன்று காலையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக்கூறி பாஜகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில் அடுத்த அதிரடியாக அண்ணாமலை ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து புகார் அளித்துள்ளார். இதனை திமுகவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications