மதக் கலவரத்தை தூண்டுகிறார்.. பாதிரியார் ஜெகத் கஸ்பருக்கு எதிராக பொங்கும் பாஜக - போலீசில் புகார்!
சென்னை : தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்ஸி தங்கையா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர் மீது புகார் அளித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஜெகத் கஸ்பர், இந்தியாவில் ஆதிகுடியைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம்களும் 40 சதவீதம் உள்ளனர். ஆனால் அரசு துரோகம் செய்வதால் 40 சதவீத நிலப்பரப்பை பிரித்து கொடுக்குமாறு கேளுங்கள் எனப் பேசினார்.
இதையடுத்து, ஜெகத் கஸ்பர் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், மதக் கலவரத்தை தூண்டும் நோக்கிலும் பேசுவதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஜெகத் கஸ்பர்
சென்னையில் சமூக செயல்பாட்டாளர்கள் கூட்டியக்கம் என்ற அமைப்பு சார்பில் 'வெறுப்பு பிரச்சாரத்தை வேரறுப்போம்' என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர், "இந்தியாவில் ஆதிக்குடிகள், முஸ்லிம்கள் 40 சதவீதம் பேர் வாழ்கிறார்கள். இந்திய அரசு அவர்களுக்கு துரோகம் செய்வதால் நிலத்தில் 40 சதவீதத்தை பிரித்து வாங்குங்கள். ஆதிக்குடிகள் இல்லையென்றால் 20 சதவீத முஸ்லிம்கள் கேளுங்கள். சகாரா பாலைவனத்தையாவது வாங்குங்கள். அங்கு சென்றாவது வாழ்ந்து கொள்வோம். வெளிநாட்டில் ஆதரவு கோருவோம், அது தேசவிரோதம் ஒன்றுமல்ல" எனப் பேசியுள்ளார்.

பாஜக கண்டனம்
இதையடுத்து நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசிய ஜெகத் கஸ்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. முஸ்லிம்களை துாண்டிவிட்டு நாட்டின் அமைதியை குலைக்க நினைக்கிறார் ஜெகத் கஸ்பர் என்றும், நம் இறையாண்மை, அரசியல் அமைப்பிற்கு மாறாக மதக் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பேசிய அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கமிஷனரிடம் புகார்
இதுதொடர்பாக, தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்ஸி தங்கையா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதரவாளரான ஜெகத் கஸ்பர் ராஜ், தேசவிரோத கருத்துகளை பேசியுள்ளார். இந்திய மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்திலும், மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் விதத்திலும் ஜெகத் கஸ்பர் தொடர்ந்து பேசி செயல்பட்டு வருகிறார். தற்போது இஸ்லாமியர்களும், எஸ்.சி எஸ்.டி மக்களும் ஒன்றுபட்டு தனி நாடு கேட்க வேண்டும் என்று பேசியதோடு, தீய எண்ணத்தை விதைத்துள்ளார்.

வன்முறையை தூண்டி
அதற்கான முயற்சியை தேசவிரோத சக்திகளோடு இணைந்து செயல்படுத்தியும் வருகிறார். இந்திய இறையாண்மைக்கும், தேச ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில், மக்களின் மத்தியில் வன்முறையை தூண்டி, தனி நாடு கோரி அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே, ஜெகத் கஸ்பர் ராஜ் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி
இதேபோல, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனிடம், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சி மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவினர் சார்பில் புகார் மனு அளித்துள்ளனர். கிறிஸ்தவ பாதிரியாரின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications