சனாதனத்தை ஒழிப்போம் என்பது "இனப்படுகொலை"யை தூண்டும் பேச்சுதான்.. உதயநிதி விளக்கத்தை நிராகரித்த பாஜக!
சென்னை: சனாதனத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர உதயநிதி ஸ்டாலின் பேசியது இனப்படுகொலையை தூண்டும் பேச்சுதான் என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் சனாதனம் எப்படி எல்லாம் தமிழருக்கு எதிரானது; தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசும், திராவிடர் இயக்கமும் அதனை எப்படி எல்லாம் தகர்த்தது என பட்டியலிட்டு பேசினார். அத்துடன் சனாதனத்தை எதிர்க்கக் கூடாது ஒழித்துதான் ஆக வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் அறைகூவல் விடுத்தார்.

அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சு, நாட்டின் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% இந்துக்களை இனப்படுகொலை செய்ய தூண்டும் பேச்சு என பாஜகவின் அமித் மாளவியா கூறியிருந்தார். இது எப்படி இனப்படுகொலையை தூண்டும் பேச்சு என அமைச்சர் உதயநிதி விளக்கம் கூறியிருந்தார். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இதனை ஏற்காமல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா கூறுகையில், உதயநிதி ஸ்டாலின் பேச்சு இனப்படுகொலையைத் தூண்டும் பேச்சுதான். அதில் சந்தேகம் இல்லை. இதனை காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் ஆதரிக்கிறார். சனாதன விரோதிகள் நீண்டகாலமாக இப்படித்தான் பேசுகின்றனர் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமஜென்ம பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் கூறுகையில், யாராலும் எந்த விலை கொடுத்தாலும் சனாதன தர்மத்தை அழித்துவிட முடியாது. பல நூற்றாண்டுகளாக சனாதன தர்மம் நிலைத்து நிற்கிறது. சனாதன தர்மத்தின் உண்மை விளக்கத்தை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ளாமல் பேசியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம எதிர்ப்பு பேச்சு தவறானதுதான் என்றார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், தமிழ்நாட்டை சேர்ந்த சிலரது உண்மை முகம் இப்போது வெள்யே வந்துள்ளது. இத்தகைய அரசியல் விமர்சனங்களால் சனாதன தர்மத்துக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது. நாங்கள் காசி தமிழ் சங்கம் நடத்தியவர்கள். இத்தகைய விமர்சனங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.












Click it and Unblock the Notifications