திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உதயநிதி ஸ்டாலின்.. இதுவே சனாதனத்தின் வெற்றி.. பாஜக தாக்கு
சென்னை: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்றார். இதனை விமர்சித்துள்ள பாஜகவின் திருப்பதி நாராயணசாமி சனாதனத்தை ஒழிப்பேன் என்று முழக்கமிட்டு விட்டு, இன்று அதே சனாதனத்தின் இருப்பிடத்தில் அமர்ந்து, உண்டு மகிழ்வது தான் காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது.இதில் கலந்த கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்சின் பங்களிப்பு' என்ற தலைப்பில் இருந்த கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.கவின் தகவல் தொழிலநுட்பப்பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா, "இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை ஒழிப்பதற்கு" உதயநிதி அழைப்பு விடுத்ததாக கூறி பதிவிட்டார். அதன்பிறகு வேகமாக வீடியோ பரவியது. நாடு முழுவதும் பேசு பொருளாகவும் விவாதமாகவும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு மாறியது. . பா.ஜ.கவின் பல்வேறு மாநிலப் பிரிவுகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவிக்க தெரிவித்தனர். சில மாநிலங்களுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டங்களும் நடந்தது. கடும் எதிர்வினைகள் வந்த போதும், உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவும் இல்லை. பின்வாங்கவும் இல்லை..
இதனால் அப்போது உதயநிதி ஸ்டாலின் தற்போது சனாதனம் குறித்து பேசிய பேச்சு, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினரிடம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை எல்லாம் ஒரே இடத்தில் ஒரே உயர்நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் மேல்முறையீடு செய்யும் அளவிற்கு நிலைமை சென்றது. இந்த வழக்கு இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசி ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இன்றுவரை பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை - சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தனது சொந்த தொகுதியான திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் அமைந்துள்ள, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ரீட்வீட் செய்துள்ள பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, சனாதனத்தை ஒழிப்பேன் என்று முழக்கமிட்டு விட்டு, இன்று அதே சனாதனத்தின் இருப்பிடத்தில் அமர்ந்து, உண்டு மகிழ்வது தான் காலத்தின் கட்டாயம். அதுவே, சனாதனத்தின் வெற்றி!" என்று கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications