ஜெயக்குமாரே.. நீங்க யார் சொல்லி பேசுறீங்க? அமர் பிரசாத் ரெட்டி ட்வீட்டால் கொந்தளிக்கும் அதிமுகவினர்!
சென்னை: பாஜக உடனான கூட்டணியில் அதிமுக இல்லை என அறிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை காட்டமாக விமர்சித்த நிலையில், பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, ஜெயக்குமாரை சீண்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்து அதிமுக தலைவர்களை கொந்தளிக்க செய்தது. இதற்கு பதில் அளித்த அண்ணாமலை மீண்டும் அதிமுக முன்னாள் தலைவர்களை வசை பாடினார். இது மீண்டும் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், "பாஜகவுடன் கூட்டணி இல்லை. இதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று அதிரடியாக அறிவித்தார்.
மேலும், அண்ணாமலைக்கு பலமுறை எச்சரிக்கை கொடுத்தோம். அதிமுகவினர் திரண்டு எழுந்தால் நீங்கள் தாங்கமாட்டீர்கள். இனிமேல் அதிமுகவினர் அண்ணாமலையை விடமாட்டார்கள். அண்ணாமலையை ஐடி விங்கில், தாறுமாறாக விமர்சனம் செய்வார்கள். நீங்கள் ஒரு கருத்து சொன்னால், அண்ணாமலை விமர்சனத்துக்கு எதிராக ஓராயிரம் எதிர்கருத்து சொல்லப்படும்.
கட்சி மேலிடம் சொல்லித்தான் தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என்றால், ஜெயக்குமாரே, நீங்கள் யார் சொல்லி பேசுகிறீர்கள் என்று சொல்ல மாட்டீங்களா? மெயின் ரோட்டுக்கு வந்துடும்மான்னு சொல்வீங்களே, அந்தம்மா சொன்னாங்களா?
— Amar Prasad Reddy (@amarprasadreddy) September 18, 2023
அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அண்ணாமலை குறித்து மேலிடத்திலும் புகார் செய்துவிட்டோம். என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, இவரை திருத்த வேண்டும், இதுபோல அவரை பேசவிடவேண்டாம் என்று கூறிவிட்டோம். ஆனால், தொடர்ந்து பேசுகிறார். அண்ணாமலையை தேசிய தலைமை தான் இயக்குகிறது. எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும்" எனத் தெரிவித்தார் ஜெயக்குமார்.
அதிமுக, கூட்டணியை முறித்துக்கொள்ள முடிவு செய்ததும், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துப் பேசியதும் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமாரின் பேச்சை பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் கண்டித்துள்ளனர். இந்நிலையில், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஜெயக்குமாரை காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளத்தில், "கட்சி மேலிடம் சொல்லித்தான் தலைவர் அண்ணாமலை பேசுகிறார் என்றால், ஜெயக்குமாரே, நீங்கள் யார் சொல்லி பேசுகிறீர்கள் என்று சொல்ல மாட்டீங்களா? மெயின் ரோட்டுக்கு வந்துடும்மான்னு சொல்வீங்களே, அந்தம்மா சொன்னாங்களா?" என ட்வீட் செய்துள்ளார் அமர் பிரசாத் ரெட்டி.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து தரக்குறைவாக அமர் பிரசாத் ரெட்டி ட்வீட் செய்துள்ளதாக அதிமுகவினர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதிமுக - பாஜக இடையேயான மோதலால் ட்விட்டரே ரணகளமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications