என்ஐஏ அதிகாரிகள் போல நடித்து.. ரூ.20 லட்சம் கொள்ளை.. பாஜக நிர்வாகி கைவரிசை.. சென்னையில் பரபர
சென்னை: என்ஐஏ அதிகாரிகளைப் போல நாடகமாடி தொழிலதிபரிடம் இருந்து 20 லட்ச ரூபாய் கொள்ளையடித்த பாஜக பிரமுகர் மற்றும் கூட்டாளிகள் இப்போது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் வெடிப்பு சம்பவம் நடந்தது அனைவருக்கும் தெரியும். இந்தச் சம்பவத்தை இப்போது என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கோவை சம்பவத்தை விசாரிப்பதாகச் சொல்லி, பாஜக பிரமுகர் தொழிலதிபரிடம் இருந்து 20 லட்ச ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ஐஏ சோதனை
வடசென்னை முத்தியால்பேட்டை அடுத்துள்ள மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் அப்துல்லா ஜமால்.. இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்த பர்மா பஜாரில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாட்டுப் பொருட்களை விற்று வருகின்றனர். கடந்த டிச. 13ஆம் தேதி காலை நேரத்தில் இவர்கள் வீட்டிற்குள் ஏழு பேர் திடீரென வந்துள்ளனர். அவர்கள் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.

கடையிலும் சோதனை
கோவை கார் வெடிப்பு தொடர்பான விசாரணை என்று அவர்கள் கூற அப்துல்லா ஜமாலும் அதை நம்பிவிட்டார். பின்னர், அவர்களின் குடும்பத்தினர் அனைவரிடமும் இருந்து செல்போனை வாங்கிய அவர்கள், என்ஐஏ அதிகாரிகளைப் போலவே வீடு முழுக்க சோதனை செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து பர்மா பஜாரில் உள்ள அவரது கடைக்கும் சென்று அங்கும் முழுமையாகச் சோதனை நடத்தியுள்ளனர்.

20 லட்சம் திருட்டு
அவர்களிடம் இருந்து சுமார் 20 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் விலை உயர்ந்த லேப்டாப் ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளார். அது தொடர்பாக ஜமால் கேட்டதற்கு விசாரணைக்காக எடுத்துச் செல்வதாகவும் மாலையில், அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளும்படியும் கூறியுள்ளார். இதையடுத்து ஜமால் உடனடியாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தை அணுகியுள்ளார். அப்போதுதான் தனது வீட்டிற்குக் கொள்ளை நடந்ததுள்ளதை அவர் உணர்ந்தார்.

போலீசில் புகார்
தனது வீட்டில் என்ஐஏ சோதனை நடக்கவில்லை என்றும் அவர்கள் என்ஐஏ அதிகாரிகளே இல்லை என்பதைத் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் வசமாகத் தன்னை ஏமாற்றி 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பணத்தைத் திருட்டி சென்றதை உணர்ந்தார். இதையடுத்து அவர் முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.

பாஜக நிர்வாகி
என்ஐஏ அதிகாரிகளைப் போல நடித்த அந்த ஏழு பேரையும் அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். அப்போது தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதில் துறைமுகம் பகுதியைச் சார்ந்த வேங்கை அமரன் மற்றும் அவரது கூட்டாளிகள் புஷ்பராஜ், விஜய்குமார் தேவராஜ் உள்ளிட்டோர் எனத் தெரிய வந்தது. வேங்கை அமரன் பாஜக நிர்வாகி என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த எட்டு நாட்களாக இவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

நீதிமன்றத்தில் சரண்
இந்தச் சூழலில் அவர்களே இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.. அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். மேலும், அவர்கள் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் இப்படிக் கொள்ளையடித்துள்ளனரா அல்லது வேறு பல இடங்களிலும் இதேபோல ஏமாற்றிக் கொள்ளையடித்துள்ளனரா என்பதைக் கண்டறியும் நடவடிக்கையிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications