அண்ணாமலைக்கு பாஜக கொடுத்த முக்கிய அசைன்மென்ட்! மையக்குழு கூட்டத்தில் வெளியான அறிவிப்பு
சென்னை: பாஜக தேர்தல் பணிக்கு 5 புதிய குழுக்களை அமைத்து தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி எல் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார். இதில் அண்ணாமலை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசியலில் நடப்பு சூழல் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அண்ணாமலை தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மேம்பாடு, பட்டியலின சிறுமி கல்வி முன்னேற்றம் தொடர்பாக வானதி சீனிவாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே ஆரம்பித்துள்ளன. கட்சி நிர்வாகிகளுடன் கூடிய ஆலோசனை பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் என திமுக, அதிமுக கட்சிகள் விறுவிறுப்பாக கட்சி பணிகளை தொடங்கியுள்ளன.

5 புதிய குழுக்கள்
இந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், இன்று சென்னை ஈசிஆர் பகுதியில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உடல்நலக்குறைவு காரணமாக இதில் அண்ணாமலை கலந்து கொள்ள மாட்டார் என்று முதலில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில் தேர்தல் பணிக்கு பாஜக தலைமையில் 5 புதிய குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் ஐந்து குழுக்களையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
வானதி சீனிவாசன், ஹெச் ராஜா
அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் என ஐந்து பேர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியானது கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் நடக்க கூடிய சூழல் பற்றி விவரங்களை பொதுவெளியில் மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு குழு அமைத்து அதை அண்ணாமலை கண்காணித்து செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
வானதி சீனிவாசனைப் பொறுத்தவரை பெண்கள் மேம்பாடு மற்றும் பட்டியலின சிறுமிகளின் முன்னேற்றம் பற்றிய தகவல்களை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெச். ராஜாவைப் பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி விளம்பரங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்வது தொடர்பாக ஒரு குழு அமைத்து அதை அவர் கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழிசைக்கு என்ன பொறுப்பு
தமிழிசை சவுந்தரராஜனுக்கு வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் முக்கிய நபர்கள் மற்றும் சமுதாய தலைவர்களை சந்தித்து அவர்களை நட்பு முறையில் வலுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் அனைத்தையும் கண்காணித்து தேர்தல் பணியில் முழு வீச்சில் செயல்படவும் பி.எல். சந்தோஷ் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறி அதை வாக்காக மாற்ற வேண்டும் என்று பி.எல். சந்தோஷ் நிர்வாகிகளிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
அண்ணாமலைக்கு மீண்டும் பொறுப்பு
இந்தக் குழுவின் நடவடிக்கைகளை மாதம் மாதம் கட்சியின் தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். எனவே இந்த ஐந்து குழுக்களும் சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகம் முழுவதும் அனைத்து பணிகளையும் செயல்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அண்ணாமலைக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அவருக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications