"மேடம், இதுல திமுக எங்க வந்தது? உங்களுக்கு குருமூர்த்தின்னா எங்களுக்கு".. பரபரக்கும் காயத்ரி ட்வீட்
டைரக்டர் ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் ரஞ்சித் தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், அவரையும் விட்டுவைக்காமல் கேள்வி எழுப்பி உள்ளார் பாஜகவின் காயத்ரி ரகுராம். இதற்கு திமுகவினர் கொந்தளித்து பதிலடிகளை தந்து வருகிறார்கள்.. என்ன நடந்தது?
ஜெய்பீம் படத்தை சுற்றி வட்டமிடும் சர்ச்சைகள் இன்னமும் ஓயவில்லை.. பாமக கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்...
இந்த கேள்விகளுக்கு நடிகர் சூர்யாவும் பதிலளித்து விளக்கமாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.. யாரையுமே தனிப்பட்ட அளவில் நாங்கள் குறிப்பிடவில்லை, சிறந்த படைப்பை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று விளக்கம் தந்தும் அதற்கு அடுத்தக்கட்ட ஆத்திரத்திற்கு பாமக சென்றது.

ஒரு லட்சம் பரிசு
சூர்யாவை தாக்கினாலோ, எட்டி உதைத்தாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பகிரங்கமாகவே பேட்டி தந்தார்.. தியேட்டர்களில் ரகளை செய்தனர்.. படத்தை மாற்றி ஓட்டும்படியான நிலைமைக்கு கொண்டு வந்தனர்.. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவும்தான், சூர்யாவிற்கு ஆதரவாக பலர் "WestandWithSuriya" என்ற ஹேஷ்டேக்கில் பதிவுகள் பகிர தொடங்கினர்.

ஆதரவு
இதில், வேதனை என்னவென்றால், சூர்யாவை தாக்குவோம் என்று வெளிப்படையாக சிலர் அறிவித்தும்கூட, திரையுலகில் ஒருத்தருமே வாய் திறக்கவில்லை.. யாருமே சூர்யாவுக்கு ஆதரவாக வரவில்லை.. இதைதான் எழுத்தாளர் அருணன், 2 சூப்பர் ஸ்டார்களும் எங்கே என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.. நடிகைகளில் ரோகினி மட்டுமே முதன்முதலில் சூர்யாவுக்காக ஆதரவை தெரிவித்தார்.. இதற்கு பிறகு, இயக்குனர் பா.ரஞ்சித் தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தார்.

பாஜக
தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் புகைப்படத்தை பகிர்ந்து "WestandWithSuriya" என்று பா.ரஞ்சித் பதிவிட்டார்.. ரஞ்சித்தின் ஆதரவு இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.. ஆனால், அதற்குள் பாஜகவின் காயத்ரி ரகுராம் கிளம்பி வந்துவிட்டார்.. ரஞ்சித்துக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.

நோக்கம் என்ன?
"ரஜினிகாந்த் சார் உங்களுக்கு இரண்டு பெரிய படங்களில் வாய்ப்பு கொடுத்து உங்களை பெரிய இயக்குனராக்கிவிட்டார்.. ரஜினி சாரை திமுக ஆதரிக்கும் Plip Plip YouTube channel தகாத வார்த்தைகளால் திட்டினார் விமர்சித்தார். நீங்களும் சினிமா துறையும் ஏன் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை? ஆனால் ஒரு சமூகத்தை குறிவைத்த சூர்யாவை மட்டும் ஆதரிக்கிறீர்கள். உங்கள் நோக்கம் என்ன? யார் யாரைப் பிரிக்கிறார்கள்? சினிமாவை முழுமையாக திமுக கைப்பற்றியது. திமுக குடும்பத்தின் அடிமைகளாக சினிமா மாறிவிட்டது. சாதி, மதம் இல்லாத ஒரே தொழில் சினிமா மட்டுமே. இப்போது அது தவறான கைகளுக்கு சென்றுவிட்டது' என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார் காயத்ரி.

காயத்ரி ரகுராம்
சூர்யாவுக்கு ஏன் ஆதரவு தெரிவித்தீர்கள் என்று ரஞ்சித்தை காயத்ரி கேள்வி எழுப்பபோய், அதில் திமுகவை சீண்டிவிட்டதுதான் இப்போது தவறாகிவிட்டது.. மொத்த திமுகவினரும் திரண்டு வந்து ட்விட்டரில் காயத்ரியிடம் கேள்வி கேள்வியாய் எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. "உங்களுக்கு எப்படி இப்படி பொய் பேச முடியுது ? ஜெய் பீம் படத்தில் ஜாதி குறிப்பிட்டு தாக்கம் இல்லை. Plip plip ரஜினியை தாக்கி பேசவில்லை கதையைதான் ரோஸ்ட் செய்துள்ளனர்.. சத்த அப்படி போங்கோ.. ஜாதியை நம்புரவா உங்க பொய்யை நம்புவா , மத்தவா கேனை தனமா பார்ப்பா" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

திமுக
மற்றொருவரோ, "இதுல திமுக எங்க வந்தது மேடம்.. உங்களுக்கு சோ,குருமூர்த்தி எல்லாம் அறிவாளினா எங்களுக்கு ரஞ்சித், மாரி, ஞானவேல் எல்லாம் ஆக சிறந்த சிந்தனையாளர் தான்.. குறிப்பு.. ரஞ்சித்,ரஜினியிடம் கெஞ்சவில்லை ரஜினி தான் ரஞ்சித்திடம் கெஞ்சினார்... ஓரமாய் போய் கருத்து சொல்லுங்க" என்று நறுக்கென கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ரஞ்சித்தை விமர்சிக்க போய், திமுகவை சீண்டிவிட்டு, அவர்களின் வாயில் விழுந்து வருகிறார் காயத்ரி..!












Click it and Unblock the Notifications