அரசு மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு இதுதான் காரணம்.. போட்டுடைத்த பாஜக
சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் மருத்துவரின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. மருத்துவர் பற்றாக்குறையால் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை எப்படி அளிக்க முடியும் என்று திமுக அரசு மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அந்த நபர் இந்தச் செயலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சரியாக வைத்தியம் பார்க்கவில்லை என்று அரசு மருத்துவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறைகளுக்கு, மருத்துவர்களின் பற்றாக்குறையே மறைமுக காரணி என்றும், ஒவ்வொரு முறை இவ்விவாதம் எழும்போதும், துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழக அரசு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வெற்று அறிக்கை மட்டுமே அளித்து வருவதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பாஜக தலைமையின் அதிகாரப்பூர்வ தளத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கு சுமார் 80,000 அரசு மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது வெறும் 30,000 மருத்துவர்கள் கூட இல்லையெனவும், தமிழக அரசு மருத்துவப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டுமெனவும் அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தமிழக முதல்வரின் நிர்வாகக் குளறுபடிகளையே குறிக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுமார் 1 லட்சம் மக்களுக்கான பழவேற்காடு அரசு மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார் என்ற செய்தியும் வெளியாகியிருந்த நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் பற்றாக்குறைகளைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் முதல்வரே?.
அரசு மருத்துவமனையை நாடுவோர் பெரும்பாலும் ஏழை மக்கள் தானே என்ற இளக்காரமா?. மருத்துவர் பற்றாக்குறையால் இயங்கும் அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சைக்கு எவ்வாறு உறுதியளிக்க முடியும்?.
கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளின்றி பிரசவத்தின் போதும், சரியான சிகிச்சைகள் கிடைக்காமலும் பல உயிர்கள் பலியாகியுள்ளதே, அதெல்லாம் உங்களை உறுத்தவில்லையா?.
சரியாக வைத்தியம் பார்க்கவில்லை என்று அரசு மருத்துவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்முறைகளுக்கு, மருத்துவர்களின் பற்றாக்குறையே மறைமுக காரணி என்பது கூட உங்களுக்கு புரியவில்லையா?.
ஒவ்வொரு முறை இவ்விவாதம் எழும்போதும், துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழக அரசு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வெற்று அறிக்கை அளித்தால் மட்டும் போதுமா?. மேலும், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய உங்களுக்கு முதல்வர் பதவி எதற்கு? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications