பாஜகவை வெட்டி துண்டாக்கி கடலில் மூழ்கடித்துவிட்டோம்.. ஆவேசமாகப் பேசிய அதிமுக மாஜி பொன்னையன்!
சென்னை: அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன், பாஜகவை வெட்டி துண்டாக்கி கடலில் வீசி விட்டதாக ஆவேசமாகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று சென்னை அதிமுக தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர், கட்சிக் கொடியேற்றி, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மேலும் பல இடங்களில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், சென்னை திருவொற்றியூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் தலைமையில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டு பேசினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்னையன், "நமது எடப்பாடி பழனிசாமி சாதுரியமாக செயல்பட்ட காரணத்தால் ஒவ்வொன்றாக வென்றார். சசிகலாவை வென்றார், ஓ.பி.எஸ்ஸை வென்றார், தினகரனை வென்றார். 94.5 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் ஒற்றைத் தலைமை என்றும் அவர் தான் பொதுச் செயலாளர் என்றும் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது. இப்படி எல்லாவற்றையும் வென்றுவிட்டார்.
இருந்த ஒன்றே ஒன்று, இஸ்லாமியர்களை காப்பது, கிறிஸ்தவர்களை காப்பது, தலித் கிறிஸ்தவர்களை காப்பது என்பவை மட்டும் தான் மீதம் இருந்தது. இப்போது பாஜக இல்லாததால் அதிலும் வெற்றி கண்டுவிட்டார். பாஜகவை வெட்டி துண்டாக்கி கடலில் மூழ்கடித்துவிட்டோம்.
வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைப்பது இல்லை. தமிழ் மொழிக்காக எதிரான, தமிழ் மக்களுக்கு எதிரான, தமிழ்நாட்டுக்கு எதிரான பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மத்தியில் மாற்றம் வர வேண்டும். டெல்லியில் ஆளுகின்ற வெறிபிடித்த பாஜக அரசுக்கு மாற்றம் வர வேண்டும். பாஜகவை பொறுத்தவரை ஒரு கொடுமையான அரசியல் இயக்கம். பாஜக தமிழகத்தை வஞ்சிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக் கூடாது என கேரளா பாஜக அங்கு போராடுகிறது. அதே போல், காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு தரக் கூடாது என கர்நாடக பாஜக அங்கு போராடுகிறது.
உச்சநீதிமன்றமே தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஒரு தீர்ப்பை விதித்து நிறைவேற்றவில்லை என்றால் ஜெயிலில் போட வேண்டும். ஆனால், அந்த தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார். உரிய தன்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவை ஆண்டு கொண்டிருந்த பாஜக அரசிடம் பிரதமர் மோடி கூறவில்லை.
தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய தமிழக பாஜக தலைவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, பேரைச் சொல்ல விரும்பவில்லை, அவர்கள் அனைவரும் தமிழர்களே இல்லை. அவர்களுக்கு தமிழ் உணர்வு உள்ளவர்களே அல்ல" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் பொன்னையன்.












Click it and Unblock the Notifications