உட்கட்சிப்பூசல்.. திமுக எம்.பிக்கு “தூண்டில்”! தமிழகத்தில் பாஜகவின் ஆபரேசன் தாமரை! இபிஎஸ் ஊராச்சே
சென்னை: மாநகராட்சி நிகழ்ச்சிகளில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சேலம் திமுக எம்.பி. பார்த்திபன் தெரிவித்திருந்த நிலையில், பாஜகவில் இணைய அவருக்கு மறைமுக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைத்தளத்தில், சேலம் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் தான் புறக்கப்படுவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி கருத்துக்களை பதிவிட்டார்.

எஸ்.ஆர்.பார்த்திபன் பதிவு
அதில், "என்னுடைய சுயமரியாதை உயிருக்கும் மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு கொடுக்கக் கூடாது. அதை மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள் கட்சித் தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.

தடுக்கிறார்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். என்னை மக்கள் பணிகளை செய்யவிடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி ஆணையாளர் நான் ஏதோ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்று நினைக்கிறார். மேலும் மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்கள்.

நான் போராட்டக்காரன்
என்னை புறக்கணிப்பது எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறப்பணிப்பதற்கு சமம். நான் போராட்டக்காரன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்." எனவும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் திமுகவில் உள்ள கட்சி விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.

உட்கட்சிப் பூசல்
இந்த பதிவால் மூலமாக சேலம் மாவட்ட திமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெளிவந்திருக்கிறது. இந்த பதிவு திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினே எஸ்.ஆர்.பார்த்திபனிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் வெளியிட்ட பதிவை நீக்கினார் எஸ்.ஆர்.பார்த்திபன்.

தூண்டில் போடும் பாஜக
உடனே "முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் சிறப்பாக பணியாற்றுவோம். சேலம் மாநகராட்சி ஆணையர் சிறப்பாக செயல்படக்கூடியவர்." என்றும் புதிய பதிவை எஸ்.ஆர்.பார்த்திபன் வெளியிட்டார். இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த மாநில ஐடி பிரிவு தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ட்விட்டரில், "சட்டுபுட்டுனு ஒரு நல்ல முடிவை எடுங்க எஸ்.ஆர்.பார்த்திபன். விரைவில் தேசப்பணி சிறக்க வாழ்த்துக்கள்!" என்று மறைமுக அழைப்பை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications