தொக்காக சிக்கிய பாஜக நிர்வாகி அஞ்சலை.. கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல்.. பெண் தாதா கைது!
சென்னை: சென்னை புளியந்தோப்பில் கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் பாஜக பெண் நிர்வாகியும், ரௌடியுமான அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் மாஜர் கான் என்பவரிடம் ரூ. 4 லட்சம் கடனாக கொடுத்துள்ளார் அஞ்சலை. 4 லட்சம் கடனுக்கு இதுவரை 8 லட்சம் பணத்தை திரும்பப் பெற்றுள்ள நிலையில் மேலும் 9.5 லட்சம் கேட்டு அஞ்சலை, மாஜர் கானை மிரட்டியதாக கூறப்படுகிறது.

வாங்கிய பணத்திற்கு மேல் டபுள் மடங்காக வட்டியுடன் கட்டிவிட்டேனே மீண்டும் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார் மாஜர்கான். இதையடுத்து அஞ்சலை அவரது வீட்டிற்கு அடியாட்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, மன உளைச்சல் அடைந்த மாஜர் கான் இது தொடர்பாக போலீசில், அஞ்சலை மீது புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, கந்துவட்டி கேட்டு மிரட்டிய புகாரில் அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். அஞ்சலை பாஜக மகளிர் அணியில் பொறுப்பு வகித்து வருகிறார்.

வட சென்னை பகுதியில் பிரபலமான பெண் தாதாக்களில் ஒருவர் தான் இந்த புளியந்தோப்பு அஞ்சலை. அஞ்சலை மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட விவகாரங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
புளியந்தோப்பு அஞ்சலைக்கு, வட சென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக பதவி வழங்கியுள்ளது தமிழக பா.ஜ.க. பா.ஜ.க தொடர்ந்து ரவுடிகளை கட்சியில் இணைத்து பொறுப்பு வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தச் சூழலில் தான் கந்து வட்டி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் பெண் ரௌடி புளியந்தோப்பு அஞ்சலை. அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications