தமிழ்நாட்டுக்குள் வந்துட்டாரே ராமர்..என்னது சிவசங்கரா? நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க..அண்ணாமலை பளீர்!
சென்னை: வடமாநிலங்களில் தான் ராமர் குறித்து பேச்சும் சர்ச்சைகளும் சுற்றி வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும், ராமர் குறித்துகள் அதிகமாக பேசப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் ரகுபதி பேசியது பேசுபொருளான நிலையில், தற்போது அதற்கு நேர்மாறாக பேசியிருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர். இந்நிலையில் ராமர் குறித்து திமுக அமைச்சர்களே பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ராமர் குறித்த பேச்சு தான் பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. என்றும் இல்லாத வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ரகுபதி, திராவிட மாடலின் முன்னோடி ராமர் தான் எனப் பேசியது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சரான ரகுபதி,”மகா விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். அதில் ராமர் அவதாரம் முக்கியமான அவதாரமாக பார்க்கப்படுகிறது. ராமர் எந்த குலத்தில் பிறந்தார் என யாரும் பார்ப்பதில்லை.
ராமர் அனைவருக்கும் பொதுவானவர் எனவே நாங்கள் கருதுகிறோம். திராவிட மாடல் ஆட்சிக்கு முன்னோடி ராமர் தான். பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னோடியாக ராமரை நாங்கள் பார்க்கிறோம். சமூக நீதியின் காவலர், சமத்துவம், சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்து உலகிற்கு எடுத்துச் சொன்னவர். எல்லோரும் சமம் என்று சொன்னவர் ராமர்” என பேசி இருந்தார்.
இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பாஜகவினர் ரகுபதியின் பேச்சை வரவேற்று பேசி இருந்தனர். இதற்கிடையே ரகுபதியின் பேச்சுக்கு நேர்மாறாக பேசியிருக்கிறார் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரான சிவசங்கர். ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்,” ராமருக்கு 3000 ஆண்டுகள் வரலாறு இருக்கிறது. என பேசுகிறார்கள். ஆனால். அது உண்மை கிடையாது.
ராமருக்கு வரலாறே இல்லை. ராஜேந்திர சோழன் வாழ்ந்ததற்கு அவர் கட்டிய கோயில்கள்,செப்பேடுகள், சிற்பங்கள், குளங்கள், ஆதாரமாக உள்ளது. அதை வைத்து அவரது பிறந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம். ராஜேந்திர சோழனுக்கு 3000 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. ஆனால் ராமர் இருந்ததற்கான வரலாறு கிடையாது. ஆதாரமும் இல்லை. ராமர் குறித்து பேசினால் அவதாரம் என்பார்கள். அவதாரம் என்றால் பிறக்க முடியாது. கடவுளாக பிறந்தவரால் அவதாரமாக இருக்க முடியாது. நம்மை மயக்கி நமது வரலாற்றை மறைத்து வேறு வரலாற்றை உயர்த்தவே இந்த செயலை செய்கின்றனர். ராஜேந்திர சோழனை நாம் கொண்டாடவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டி விடுவார்கள் என பேசி இருந்தார்.
அமைச்சரகுபதியின் பேச்சும் சிவசங்கரின் பேச்சும் வேறு பெயராக இருக்கும் நிலையில் இதுகுறித்து விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை. ராமர் குறித்து திமுக அமைச்சர்களே பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென கூறியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில்,”கடந்த வாரம், திமுகவின் சட்ட அமைச்சர் ராமர் சமூக நீதியின் போராளி. மதச்சார்பின்மையின் முன்னோடி, அனைவருக்கும் சமத்துவத்தை அறிவித்தவர் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சோழன் வரலாற்றை அழிக்கும் சூழ்ச்சி என குறிப்பிட்டதோடு ராமருக்கு வரலாறே இல்லை என்று கூறியிருக்கிறார். புதிய பாராளுமன்ற வளாகத்தில் சோழ வம்சத்தின் செங்கோலை பிரதமர் மோடி நிறுவிய போது எதிர்த்தவர்கள் இவர்கள்தானே? தமிழ்நாட்டின் வரலாறு 1967ல்தான் தொடங்கியது என்று நினைக்கும் ஒரு கட்சியான திமுக நாட்டின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் மீது அன்பை வெளிப்படுத்தியிருப்பது நகைச்சுவையாக இருக்கிறது.
சிவசங்கர் தனது சக அமைச்சரிடம் இருந்து ராமரைப் பற்றி ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும். இரு அமைச்சர்களும் கலந்தாலோசித்து ராமர் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications