போட்டோஷாப் படம்.. உங்களுக்கு அவமானமாக இல்லையா? பீட்டர் அல்போன்ஸ்க்கு அண்ணாமலை சரமாரி கேள்வி
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், பிரதமர் நரேந்திர மோடி குறித்த போட்டோஷாப் புகைப்படத்தை பகிர்ந்து இருந்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார், ஆளும் கட்சியின் கைப்பாவை போல செயல்படுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் அண்ணாலை கண்டித்துள்ளார்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்று. இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டிபுதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி பணிகளை தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்படுகின்றன.

1224 உறுப்பினர்கள்
தற்போதைய நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களும் அமருகிற வகையில் இருக்கை வசதிகள் உள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடம், எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் கட்டப்படுகிறது. புதிய கட்டிடத்தில், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும்.

எப்படி அமைகிறது
64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில் உருவாகும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது,. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படுகிறது.

இந்திய ஜனநாயகம்
நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகிற வகையில் பெரிய அரங்கம் ஒன்று அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் அமைய உள்ளது. நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், உணவு உண்ணும் அரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள் என ஏராளமான வசதிகளுடன் அமைக்கப்படுகிறது.

2022 ஆகஸ்ட் 15ல் திறப்பு
நிலநடுக்கத்தால் பாதிக்காத அளவுக்கு வலிமையுடன் தொழில் நுட்பங்களுடன் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு, இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டு கொண்டாட்ட அமர்வினை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புவதால் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து வந்த கையோடு, இந்தக் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்ய கடந்த 26-ம் தேதி இரவு சென்றார். அங்கு கட்டிடப் பணிகளைக் கண்காணித்த பிரதமர் மோடி ஒரு மணி நேரம் வரை இருந்து அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

போலியான ஒரு படம்
கட்டிடம் கட்டும் இடத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளிடம் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் பிரதமர் மோடியைப் புகைப்படம் எடுக்க ஒருவர் தரையில் படுத்துக்கொண்டு கேமராவை உயர்த்தியது போன்ற போலியான புகைப்படமும் வைரல் ஆனது.

தகுதியான அரசு
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ''சொல்வதற்கு ஒன்றுமில்லை. நமக்குத் தகுதியான அரசே நமக்கு கிடைக்கும்'' என்று கூறி பிரதமர் மோடியைப் புகைப்படம் எடுக்க ஒருவர் தரையில் படுத்துக்கொண்டு கேமராவை உயர்த்தியது போன்ற போலியான புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

பாஜக பதிலடி
இதை பார்த்து கடும் கோபம் அடைந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தமிழ்நாட்டில் ஆளும் கட்சியின் கைப்பாவை போல செயல்படுவதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்களின் ட்வீட் மூலம் பொய்களைத் திணிப்பதற்கு உங்களுக்கு அவமானமாக இல்லையா? உங்களின் விருப்பத்துக்கு ஏற்ப போலி செய்திகளைத் தொடர்ந்து பரப்பி வருகிறீர்கள் என்றாலும் நம்முடைய பிரதமர் மற்றும் தமிழக பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது''இவ்வாறு அண்ணாமலை கூறியிருந்தார்.

உண்மையான படம் அல்ல
அத்துடன் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம், உண்மையான புகைப்படம் என்று இரண்டு புகைப்படங்களையும் அண்ணாமலை பதிவில் இணைத்து இருந்தார். பிரதமர் மோடி குறித்து போட்டோஷாப் படத்தை பீட்டர் அல்போன்ஸ் பகிர்ந்து இருந்ததற்கு பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications