கோர்ட்டில் கண்ணியத்துடன் ஆஜராக வேண்டாமா? இப்படியா வருவீங்க! அஸ்வத்தாமன் மீது நீதிமன்ற அவமதிப்பு!
சென்னை: பாஜக நிர்வாகியான அஸ்வத்தாமன், முறையாக வழக்கறிஞர் கோட் அணியாமல் ஒரு வழக்கில் வீடியோ மூலம் வாதிட முயன்றதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வழக்கறிஞராகவும் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். அந்த வகையில், நாகை மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி துணைத் தலைவர் கதிரவன் முன்ஜாமீன் கோரி வழக்கு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொலி வாயிலாக வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான அஸ்வத்தாமன், கதிரவனுக்காக ஆஜரானார். அப்போது அவர் வழக்கறிஞர் கோட் அணியாமல் வெள்ளை சட்டை மட்டுமே அணிந்துக் கொண்டு ஆஜரானார்.
இதை பார்த்த நீதிபதி, நீதிமன்றத்தில் கண்ணியத்துடன் ஆஜராக வேண்டாமா என அதிருப்தி தெரிவித்தார். தோள்பட்டை வலிக்காக தான் மருத்துவமனையில் சிசிக்சை பெற்றிருப்பதால் கோட் அணியாமல் ஆஜரானதாக அஸ்வத்தாமன் தெரிவித்தார்.
ஆனால் இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். இது தொடர்பாக அஸ்வதம்மன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுப்பதாகவும் அவர் அக்டோபர் 22 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications